ஐயப்பன் கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை? ஆதி சாஸ்தா கோயில் எங்குள்ளது?ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள்!

0
550

சமூகநீதியை போதித்த ஐயப்பன் குடிகொண்டிருக்கும் சபரிமலை கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை?, தற்போதுள்ள ஐயப்பன் விக்ரஹத்தை செய்தது யார்?, சபரிமலையில் மட்டும்தான் இளம் பெண்களை அனுமதிப்பதில்லையா? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோயில்தான் சபரிமலை. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து கருதி சென்ற பாண்டியன், திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன்.

ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில் வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்). 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக வளர்ந்து தனது அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை.

பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எந்தித்துவிடுவாரோ என்று, அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி, யானை, வாள், மாலை போன்றவை உள்ளன. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.

ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு வரச் சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இரு முடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற கே.ஜே.யேசுதாஸ் பாடியபாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர். இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி.

ஆங்கிலேயர் ஒருவர் 1894ல் எழுதிய Memoir of the survey of Travancore and Cochin states என்ற புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15,000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.

பரசுராமரால் பிரதிஷ்டை  செய்யப்பட்ட ஐயப்பன் சிலை 1950-ல் தீ விபத்தில் சேதம் அடைந்தது. அந்த சிலை உருக்கப்பட்டு தற்போது கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது. தீ விபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் மதுரை ராஜமாணிக்கம் பிள்ளை, பி.டி.ராஜன் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத் தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விக்கிரகம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில், தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப் பட்டது.

கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காகதேவ பிரசன்னம்என்ற பூஜை நடத்தப் படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.

Also Watch:- இஷ்டத்துக்கு விரதத்தை குறைக்காதீங்க ~ இந்த வீடியோ பார்த்துவிட்டு மாலை போடுங்க | Aravind Subramanyam

அஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில், ஹரியானா மாநிலம் பெஹோவா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள கார்த்திகேயா கோயில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா, ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள மங்கல் சாண்டி கோயில், கேரள மாநிலம் மலையின்கீழு எனும் ஊரில் உள்ள ஸ்ரீபாத மனபாசுவாமி கோயில், அசாம் மாநிலம் பர்பேட்டாவில் உள்ள பட்பாஸ்சி சத்ரா கோயில், ராஜஸ்தான் மாநிலம் ரானாக்பூரில் உள்ள ஜெயின் கோவில் போன்றவைகளிலும் சபரிமலையைப் போல பெண்களை அனுமதிப்பதில்லை.

சொரிமுத்து ஐயனார்

ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு மிக பிரபலம். அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில்.

விரத முறையில் உணவை உண்டு அன்ன தானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே. மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது. ஏழை, பணக்காரர், சாதி, உயர் அதிகாரி, பாமரன் என பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிசிறப்பு.

41 நாட்கள் விரதம் இருக்கும் முறை சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை இது. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே.

கேரள கட்டுமான முறையையும். தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை. மணிகண்டன் தனது கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்ற ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக, குருசாமியாக ஐயப்பன் யாத்திரையில் இருக்கிற வழக்கம். தன்னை காண வேண்டுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்.

மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல், ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை, ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர்.

சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியால் அதன் சக்தி குறையாமல், ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது.

பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுப் படிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன். சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன் படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறுகால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

நன்றி – ஆன்மீகமலர்

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*