த்ரில்லர் காட்சிகளுடன் ‘சுழல்’ வெப் சீரிஸ்! பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என நட்சத்திர பட்டாளங்கள்!

0
353

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 தேதி வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட முறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர் – காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் புஷ்கர் – காயத்ரி பேசும்போது,” இந்த தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார். அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்த தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்தத் தொடருக்காக கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனை தொடங்கி வைத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் கதிர் பேசுகையில், ” இந்த தொடரில் நடிக்கும் போது, இந்த தொடர் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில்லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில், அவர்களுடைய மொழியில் பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி. இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனால் இவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதனையடுத்து என் திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ஆர் பார்த்திபன் பேசும்போது, ”32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் – காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞான பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்று கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதள தொடரில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த தொடர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னை தேர்வு செய்தார்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் சென்று விடுவாள். அவளை தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள்’ என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry