இன்னும் 5 மாதம்தான்…! டிஜிபி-யை பகிரங்கமாக மிரட்டும் உதயநிதி! கொந்தளிப்பில் காவல்துறையினர்!

0
6

அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, திருக்குவளையில் கடந்த 20ம் தேதி உதயநிதி தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (22.11.2020) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக உதயநிதியை போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது; “என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன், மைக் பிடித்து பேசக் கூட இல்லை எனக் கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். அப்போது கூட்டத்தினரை சமாதானம் செய்து, வன்முறை வேண்டாம் எனக் கருதி கைது செய்யுமாறு கோரினேன்.

இதைத் தூண்டிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி தான். அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?” இவ்வாறு அவர் பேசியுள்ளார். காவல்துறை டிஜிபியை மிரட்டும் தோனியில் உதயநிதி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி, ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், போலீசாரின் நிலைமை என்ன ஆகும் என்பது இதிலிருந்தே தெரிகிறதுஎனக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry