தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு எனக் கூறுவதா? அடையாளத்தை மறைப்பதா எனவும் ஐகோர்ட் கேள்வி!

0
247

தமிழுக்கான கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் மற்றும் மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு விசாரிக்கிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசுத்தரப்பில், முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில், “1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களில், 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்என தெரிவிக்கப்பட்டது.

அப்போது,” இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில், 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கும்போது, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன?. 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது, அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “அது அரசின் கொள்கை முடிவு” என  மத்திய அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள்,” அரசின் கொள்கை முடிவு என்றாலும், ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. ஆனால் அதனதன் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மத்திய அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அப்போது பதிலளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையில் போதுமான நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?, மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தெரிகிறது. கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை. அப்படி இருக்கும்போது  கல்வெட்டுக்களை ஏன் மைசூரில் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சனை இருக்கும் நிலையில், தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எந்தெந்த பணிகளுக்கானவை? எந்தெந்த மொழிக்கு எத்தனை இடங்கள்? என்ன பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry