
தவறான மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபியல் போன்ற பல காரணிகளால் நீரிழிவு நோய் உருவாகிறது. இது, வளர்சிதை மாற்ற கபம் வகையைச் சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். நீரிழிவு நோயை நிர்வகிக்க, ஆரோக்கியம் குறித்த சரியான விழிப்புணர்வு, சீரான உணவு மற்றும் சில நேரங்களில் இயற்கை வைத்தியத்தின் உதவியும் தேவைப்படுகிறது. அந்த வகையில் உலர்ந்த இஞ்சி எனப்படும் சுக்கு கவனத்தை ஈர்க்கிறது.
Also Read : வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects
பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரிசையில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சுக்கு திகழ்கிறது. இது வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது செரிமானத்தில் பெரிய பங்கு வகிக்கிறது. சுக்கை தினசரி பயன்படுத்தினால், உடல் வலுவாக இருக்கும். நீரிழிவு நோய்க்கு சுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சாத்தியமானதொரு இயற்கை தீர்வை சுக்கு வழங்குகிறது என்றே சொல்லலாம். சுக்கில் உள்ள சக்தி வாய்ந்த உயிரியக்க கலவைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். துத்தநாகம் நிறைந்த இந்த மருத்துவ பொருள் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
Journal of Ethnic Foodsல் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி, சுக்கு எடுத்துக் கொள்ளும்போது A1C அளவு குறைகிறது. அதவாது ஒட்டுமொத்த நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு சுக்கு துணையாக இருக்கிறது. A1C என்பது சில மாதங்களுக்கான ரத்த சர்க்கரை அளவை கண்டறியும் சோதனையாகும். இதை HBA1C என்று குறிப்பிடுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள்.
அதேபோல், journal ‘Nutrients,’ன் ஆய்வுக் கட்டுரையின்படி, ‘இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சேர்மானத்தை சுக்கு தன்னகத்தே கொண்டுள்ளது. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான என்சைம்களை இது தடுக்கலாம். இரத்த உயிர்வேதியியல் அளவுருக்கள் மற்றும் லிப்பிட் சுயவிவரங்களை மேம்படுத்தலாம்’ என்று அந்த ஆய்வு கூறுகிறது. ‘இஞ்சியின் முக்கிய சேர்மானமாக இருக்கும் ஜிஞ்சரோல்ஸ், உயர் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவக்கூடும் என்று Iranian Journal Of Pharmaceutical Research தெரிவிக்கிறது.
நீரிழிவு மேலாண்மைக்காக சுக்கை எவ்வாறு பயன்படுத்தலாம்?
வெதுவெதுப்பான நீரில் 2 கிராம் சுக்குத்தூளை கலக்கவும். விருப்பப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை உங்கள் அன்றாட வழக்கமாக மருத்துவரின் வழிகாட்டுதலுடன் தொடரலாம்.
இஞ்சி மற்றும் சுக்கு பாதுகாப்பானதாகத் தோன்றினாலும், இஞ்சி இன்சுலின் அளவை குறைக்கும் என்பதால் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சி அல்லது சுக்கை சப்ளிமென்ட்டாக எடுப்பதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
இஞ்சி அல்லது சுக்கு, HBA1C அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், ஃபாஸ்டிங் எனப்படும் வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவையும், Postprandial எனப்படும் காலை உணவுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகு எடுக்கப்படும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவையும், சிறுநீரில் மைக்ரோஅல்புமினுரியா அளவையும் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.
சுக்கு, இஞ்சி பொதுப்பலன்கள்
இஞ்சி அல்லது சுக்கை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு மட்டுமின்றி பல நோய்களில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும். இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க சுக்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு மூன்று கிராம் சுக்குப் பொடியை எடுத்து வர கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
நாள்பட்ட அஜீரணத்தால் வயிற்றில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை சுக்கு நீக்குகிறது. மோசமான உணவுப் பழக்கமும், இன்றைய வாழ்க்கை முறையும் அஜீரணத்திற்குக் காரணமாகிறது. ஆனால், உணவுக்கு முன், ஒன்று முதல் இரண்டு கிராம் சுக்குப் பொடியை உட்கொள்வது செரிமானத்தை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.
சுக்கு, வலி நிவாரணி ஆகவும் செயல்படுகிறது. இது மாதவிடாயின் போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து மீள உதவுகிறது. மாதவிடாய் வலியைப் போக்க மாதவிடாய்ச் சுழற்சியின் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு கிராம் சுக்கு பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு காலையில் ஏற்படும் குமட்டலைக் குறைக்க சுக்கு உதவுகிறது. அரை டீஸ்பூன் சுக்குப் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காலையில் ஏற்படும் குமட்டலில் இருந்து விடுபடலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள சுக்குப் பொடி, வீக்கத்தைக் குறைக்கவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சிறிதளவு உப்புடன் சுக்கு பொடியை உட்கொள்வது வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. VELS MEDIA does not claim responsibility for this information.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry