
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039 ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Also Read : வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!
இந்த நிலையில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஊர் பற்றி தெரிந்துகொள்வோம். சோழ சாம்ரஜ்ஜியத்தின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர். அவருடைய பிறப்பும், பதவி ஏற்பும், இறப்பும் இன்றளவிலும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அவரது தாய், அவரது பூர்வீக ஊர், ஆகிய விஷயங்களைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள, அக்காலத்தில் மலையமானாடு என்று அழைக்கப்பட்ட நடுநாட்டின் தலைநகரான திருக்கோவிலூரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மிகப் பரந்த மணல் பரப்பை கொண்ட தென்பெண்ணை ஆற்றின் கரை அருகில் கபிலர் குன்றை தாண்டி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். அகநானூற்றுப் பாடலில் ‘துஞ்சா முழுவிற் கோவல்’ என்றும் புறநானூற்றில் ‘முரண்மிகு கோவலூர் ‘என்றும் குறிப்பிட்ட இந்தப் பகுதி, கோவில் கல்வெட்டில் படிக்கும் பொழுது ‘திருக்கோவிலூர்’ என்றே பொறிக்கப்பட்டுள்ளது. அழகிய கோவில்கள் நிறைந்த இந்த ஊர் வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்திய வரலாற்றில் சோழர்கள் வம்சம் நீண்ட காலம் புகழ்பெற்று இருந்ததற்கும், தற்பொழுது பேசப்பட்டு வருவதற்கும் மிக முக்கிய காரணமே இந்த திருக்கோவிலூர் தான். மலையமானின் மகளாகப் பிறந்த வானவன் மாதேவி தான், தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயத்தை இன்றளவிலும் தலை நிமிர்ந்து பார்க்கும் படி செய்த ராஜராஜ சோழனின் தாயார்.

திருக்கோவலூரைப் பற்றி விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் கூறும் போது, “கடந்த காலங்களில் திருக்கோவிலூர் பகுதி மலையமானாடு என்று அழைக்கப்பட்டது. கி.பி. 912 முதல் கி.பி. 949 தக்கோலப் போர் நடக்கும் வரை சோழர்கள் மலையமானாட்டை ஆண்டு வந்தனர். கி.பி. 949 தக்கோலப் போரில் மூன்றாம் கிருஷ்ண தேவனால், முதல் பராந்தகனின் முதல் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டான். இதனால் சோழர்களின் ஆட்சி மலையமானாட்டில் சிறிது காலம் இல்லாமல் போயிற்று என்ற போதிலும் கி.பி. 965 -ஆம் ஆண்டுக்கு பிறகு சோழர்களுடைய ஆட்சி திருக்கோவிலூர் பகுதியில் நிரந்தரம் ஆகிவிட்டது.
முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும், இரண்டாம் பராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்ட சுந்தர சோழன் திருக்கோவிலூர் மலையமானின் மகளை மணந்தவர். இவருக்கு தேவிஅம்மன், வானவன்மாதேவி என்ற இரண்டு மனைவிகள் உண்டு என திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இதில் வானவன் மாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமானின் மகள் என்பதை தெளிவுபடுத்துகிறது. சுந்தர சோழன் – வானவன்மாதேவியின் இரண்டாவது மகன்தான் ராஜராஜசோழன்.

வானவன்மாதேவி கணவன் சுந்தர சோழன் மீது மிகுந்த அன்பு கொண்டவள், அதனால்தான் இந்த மன்னன் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலமாகவும் அறியலாம். மேலும் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில் கல்வெட்டிலும் இது தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தர சோழனுக்கும் – வானவன் மாதேவிக்கும் பிறந்தவர்கள் ஆதித்த கரிகாலன், அருண்மொழி தேவன் எனும் ராஜராஜ சோழன் என்ற இரண்டு மகன்களும், குந்தவை எனும் பெண்ணும் ஆவார்கள்.


ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த ராஜராஜ சோழனின் இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் அவர் அழைக்கப்பட்டார். ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988). தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகாலம் உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


திருக்கோவிலூர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜராஜன் அங்கு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இதுபற்றி பேசும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் வெங்கடேசன், “ராஜராஜ சோழன் பிறந்த ஊர் திருக்கோவிலூர் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டு இருப்பதை உறுதி செய்தார். திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில், இந்தக் குழந்தை இந்திரனுக்கு ஒப்பானவன். மான் வயிற்றில் பிறந்த புலியானவன்,” என்று கூறப்பட்டுள்ளது என்றார்.
காஞ்சிபுரத்தில் மாளிகையில் இருக்கும் பொழுது சுந்தர சோழன் இறக்கின்றான். தன் கணவன் இறந்த செய்தியறிந்து உடன்கட்டை ஏற வானவன் மாதேவி தயாராகிறார். வீரட்டானேஸ்வரர் கோவில் அருகில் தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலக்கல்லில் உடன்கட்டை ஏறுகிறார். இதை திருக்கோவிலூர் கீழையூர் கோவில் கல்வெட்டு தெளிவாக கூறுகிறது. இதையே திருவாலங்காடு செப்பேடுகளும் கூறுகிறது என்கிறார் அவர்.
அதேநேரம், ராஜராஜன் பிறந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்தும் நிலவுகிறது. அதாவது, திருக்கோவிலூரை அடுத்த மணலூர்ப்பேட்டைக்கு மிக அருகில் உள்ள ஜம்பை என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் பிறந்தார் என்றும், 13 வயது வரை திருக்கோவிலூரில் வளர்க்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. தற்போது குக்கிராமமாக உள்ள ஜம்பை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய நகரமாக இருந்தது. ராஜராஜனின் தாய்வழிப் பாட்டனான மலையமான் ஜம்பையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார். எனவேதான் வானவான் மாதேவி பிரசவத்துக்காக ஜம்பை வந்துள்ளார். இங்குதான் ராஜராஜ சோழன் பிறந்தார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கல்வெட்டு குறித்து பேசும் வீரட்டானேஸ்வரர் கோவிலின் தலைமை குருக்கள் சுந்தரமூர்த்தி, “சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வெட்டை ஆய்வாளர் நாகசாமி கண்டுபிடித்தார். 10 நாட்கள் இங்கு தங்கி கல்வெட்டு முழுக்கவும் படித்து ஆவணப்படுத்தினார்கள். மலையமானாட்டின் தொப்புள்கொடி உறவாகத்தான் தஞ்சாவூரை நாங்கள் பார்க்கின்றோம்,” என்று கூறி முடித்தார். இத்திருத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய நகராட்சியாக பரிணமித்துக்கொண்டு இருக்கிறது. இங்குள்ள பிரபலமான உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 43வது ஆகும். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.
With Input : BBC
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry