தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் நாராயணசாமி! பள்ளிகளை திறக்கவிடமால் முற்றுகையிடப்போவதாக அதிமுக அறிவிப்பு!

0
10

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகளை நாளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளிகளை திறக்கவிடாமல், போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் புதுச்சேரியில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 10, 12-ம் வகுப்புகள் நாளை முதலும், 9,11-ம் வகுப்புகள் வரும் 12-ந் தேதி முதல் செயல்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என ,கூட்டணி கட்சியான, திமுகவின் தெற்கு மாநில அமைப்பாளர் எம்.எல்.. சிவா, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், பள்ளிகளை திறந்தே தீருவது என்ற அரசின் நிலைப்பாடு குறித்து, புதுச்சேரி சட்டமன்ற அதிமுக குழு தலைவர் அன்பழனை, வேல்ஸ் மீடியா சார்பில் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போது, மாணவர்களின் உயிரோடு ஆளும் காங்கிரஸ் அரசு விளையாடுகிறது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் அளவுக்கு பள்ளிகளில் உள்கட்டமைப்பு இல்லை, அதற்கான சரியான சூழலும் இல்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கிறது.

பள்ளிகளை திறக்க வேண்டாம் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், வீண் பிடிவாதத்தால் முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு நடந்துகொள்கிறார். அவர் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதலமைச்சரின் செயல்பாடு தான்தோன்றித்தனமாகவும், பொறுப்பற்ற வகையில் இருக்கிறது. உப்பளத்தில் பள்ளிகளை திறக்க விடமாட்டோம். ஏதாவது ஒரு பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அன்பழகன் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டறியலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு  அரசாணையை நிறுத்திவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry