ஜுலை 11 பொதுக்குழு செல்லும்! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நீடிக்கிறார்!

0
62

கடந்த ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி, பொதுக்குழுவை கூட்ட முடியாது’ என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ‘தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது; அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் இது நேரடியாக தலையிடுவதாக உள்ளது. கட்சி செயல்பாடுகளில் மட்டுமின்றி, பெரும்பான்மையினரின் விருப்பத்திலும் இந்த உத்தரவு குறுக்கிடுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை முடியும் வரை, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Also Read : தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!

எடப்பாடி பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், விஜய் நாராயண் ஆகியோர் வாதாடினர். ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியனும், வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராமும் வாதாடினர்.

வழக்கறிஞர்களின் வாதம், கடந்த 25ந் தேதி ஒரே நாளில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு அளித்தது.

அதிமுக சட்ட விதிகளின்படியே பொதுக்குழு நடைபெற்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஜுலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையின் இருபுறங்களிலும் மூன்று இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry