ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், பெரிய கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளதை மறுக்க முடியாது. அதேநேரம், பா.ஜ.க., மற்றும் ரஜினி முகாமுக்கு திமுக ஸ்லீப்பர் செல்களை அனுப்புவதாக கிடைக்கும் தகவல் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவும் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் புதிய கட்சி, தமிழக அரசியலின் அடித்தளத்தையே மாற்றி, கூட்டணிகளை உடைக்கும் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது.
பொதுப்பார்வை என்ன?
அமித் ஷா–வின் தமிழக வருகைக்குப் பிறகுதான் காட்சிகள் வேகவேகமாக மாறத்தொடங்கின. அதன் பிறகே கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை முன்கூட்டியே (கடந்த மாதம் 30-ந் தேதி) சொன்னது வேல்ஸ் மீடியா மட்டும்தான்.
ரஜினியின் அரசியல் பிரவேசம், திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு சாராரும், அதிமுக–பாஜக கூட்டணிக்கே பாதிப்பு இருக்கும் என சிலரும் கணிக்கிறார்கள். ரஜினி முன்வைப்பது ஆன்மிக அரசியல் என்பதால், அதிமுக–பாஜக கூட்டணிக்கே பாதிப்பு இருக்கும் என்பது சிலரது நம்பிக்கை. மேம்போக்காக பார்த்தால், இது சரி என்றே தோன்றலாம்.
ஏனென்றால், திமுக–வுக்கான நிரந்தர வாக்கு வங்கி மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக சேர்த்தாலே 4% வாக்குகள்தான் இருக்கும்), முழுவதுமாக திமுக–வுக்கே கிடைக்கும் என்ற பார்வை இருக்கிறது. அதேபோல், அதிமுக–வுக்கான நிரந்தர வாக்கு வங்கி மாறப்போவதில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பது அதிமுக–வுக்குத் தெரியும். ஆன்மிக ஈடுபாடுள்ளவர்கள், தேசிய சிந்தனை கொண்டவர்கள், ஆழ்ந்த இந்து மதப் பற்றாளர்கள் பாஜக–வைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆன்மிக அரசியலை முன்வைக்கும் ரஜினி, இவர்களது வாக்குகளைத்தான் பிரிப்பார் என்பது பலரது கணிப்பு.
எந்தக் கட்சிக்குத்தான் பாதிப்பு இருக்கும்?
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு பாதிப்பு இருக்கும் என, ரஜினி ஆதரவாளரும், மூத்த பத்திரிகையாளருமான வி.எம். சுப்பையாவிடம் பேசினோம். “1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அதுமுதலே, ரஜினி ரசிகர்கள் திமுக–உறுப்பினராகவோ அல்லது திமுக அனுதாபிகளாகவோ இருந்து வருகிறார்கள். ஜி.கே. மூப்பனார் இருந்தவரை தமிழ் மாநில காங்கிரஸிலும் ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு அவர்களும் திமுக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தனர்.
ரஜினி ரசிகர்களில் வெகுசிலரே அதிமுக–வில் இருப்பார்கள். எனது கணிப்புப்படி, பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திமுக–விலேயே இருந்தார்கள். அரசியல் பிரவேசத்தை ரஜினி உறுதி செய்த பிறகு, அவர்கள் அப்படியே மாறிவிட்டனர். எனவே, ரஜினியின் அரசியல் பிரவேசம், திமுக–வின் அடித்தளத்தை உறுதியாக ஆட்டுவிக்கும். ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதால், சித்தாந்த ரீதியாக, அதிமுக–பாஜக.வுக்கு பாதிப்பு என சிலர் நினைக்கக்கூடும். ஆனால், ரஜினியால், திமுக வாக்கு வங்கியில்தான் பெரிய ஓட்டை விழும். தலைமையின் மத பாரபட்சம் பிடிக்காத திமுக–வினர், ரஜினிக்கோ, அதிமுக கூட்டணிக்கோதான் வாக்களிப்பார்கள். அதேபோல், நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் திமுக–வுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை” என்று உறுதியாகக் கூறினார்.
ரஜினி கூட்டணி அமைப்பாரா?
கூட்டணி பற்றியும் வி.எம். சுப்பையாவிடம் கேட்டோம். “தேர்தல் நெருக்கத்தில், கள சூழ்நிலைக்கு ஏற்ப ரஜினிதான் அதுபற்றி முடிவு செய்வார். ஆனால், ஜி.கே. வாசன், கமல்ஹாசன், டிடிவி தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள், ரஜினியின் அரசியல் வருகைப்பற்றி விமர்சிக்காததை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் ரஜினியை விமர்சிக்கின்றனர். அவர்களை நாங்கள் பொருட்டாகவே எடுக்கவில்லை. இருப்பைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
திருமாவளவனும் விமர்சனம் செய்கிறார். ஆனால், அவரே ரஜினியிடம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், ரஜினி கவர்ச்சி மிக்க தலைவராக பரிமணிக்கும் வாய்ப்பு இருக்கிறது, அவர் மீது சாதி, மத, இன முத்திரைகளை குத்த முடியாது என 2017-ல் திருமாவளவன் கூறியுள்ளார். எனவே தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக்காட்சிகள் மாறுவது உறுதி” என்றார்.
திமுக–வின் ஸ்லீப்பர் செல்கள்
தமிழகத்தில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளில், திமுக ஆதரவு தலைவர்கள், அதிமுக ஆதரவு தலைவர்கள் என இருப்பார்கள், இருக்கிறார்கள். இவர்களையும் தாண்டி, பாஜக மற்றும் ரஜினி முகாமுக்குள், ஸ்லீப்பர் செல்களாக திமுக சிலரை அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. கட்சியின் நடவடிக்கையும், தலைமையும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திமுக–வினர் சிலர் பாஜக–வில் ஐக்கியமாகின்றனர். (கட்சி மாறிய அனைவருக்கும் இது பொருந்தாது)
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இனிமேலும் அதேபோன்று அனுப்பி வைத்தால், கட்சியின் இமேஜ் பாதிக்கப்படலாம் எனக்கருதும் திமுக தலைமை, பாஜக–விலிருக்கும் தமது ஆட்கள் சிலரை, ரஜினி முகாமுக்கு அனுப்புவதாக தெரிகிறது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, ரஜினி முகாமுக்குள் நுழையும் அவர்கள், என்னவிதமான பின்னடைவை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியும். கொள்கை ரீதியாக திமுக–வை ஆதரிப்பவர்களை, அனுதாபிகளை, நிர்வாகிகளாக நியமித்து, கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான், முக்கியப் பதவிகளில் அமரும் ஸ்லீப்பர் செல்களுக்கான அஜெண்டாவாக உள்ளதாம். மாவட்ட வாரியாக ஸ்லீப்பர் செல்கள் ஊடுருவ வைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இருக்கும் ரஜினி அலை?
ரஜினிக்கு, வயது வித்தியாசமின்றி அனைத்து மதங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் ரஜினி இதுநாள் வரையும் வலதுசாரியாகவே அறியப்படுகிறார். ரஜினி முன்வைக்கும் ஆன்மிக அரசியல், இந்துக்களுக்கானது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்மிகத்துக்கு மதம் கிடையாது, அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்துச் செல்வோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார் தமிழருவி மணியன். ஆனாலும, கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை உடைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
தமிழ்நாட்டில் பேட்ட திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம். இவர்களும், இவர்களைச் சார்ந்த ஒருவரும் வாக்களித்தாலே ரஜினி தொடங்கும் கட்சிக்கு சற்றேறக்குறைய 12% வாக்குகள் கிடைத்துவிடும்.
கட்சியின் பெயர் எதைத்தாங்கி இருக்கப்போகிறது?, கொள்கைகள் என்னவிதமாக வரையறுக்கப்பட போகிறது? சின்னம் என்னவா இருக்கும்? என்பதைப் பொறுத்துத்தான் ரஜினி அலையின் வேகத்தை தீர்மானிக்க முடியும். கொள்கையை விரைவாக இறுதி செய்து, அதை மக்களிடம் கொண்டு சென்றால்தான், தான் நினைப்பதில் பெரும்பங்கை ரஜினியால் அடையமுடியும். ரஜினியின் அதிரடியால் ஆட்டம் காணப்போவது எந்தக் கட்சி என்பது 2-3 மாதங்களில் தெரிந்துவிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry