‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’! மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர்!

0
259

சென்னையில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன், மெட்ரோ நிர்வாகம் சார்பில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை ஆலந்தூர் கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்பட்ட க்ளோவர் இலை வடிவிலான மேம்பாலத்தை 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் கீழ் காலியாக இருந்த இடத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம், சி.எம்.டி.ஏ. நிதியுதவியுடன் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து கொண்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், மைய பகுதியில் சிமெண்ட் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கத்தின் முழு பகுதியும் சூரிய சக்தி விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கத்திப்பாரா சதுக்கத்தில் 1.45 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கடைகள், கைவினை பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உள்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த சதுக்கம் 25 பேருந்துகள், 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் கொண்டது. பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள பெரிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள, 56 கடைகளில், 18 கடைகள் ஓட்டல்களுக்கும், கேண்டீன்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சதுக்கம் முழுவதும், 27 வகையான, 7,069 செடிகள் நடப்பட்டு, வளாகம் ரம்மியமாக உள்ளது.

‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில், சென்னை நகரின் அடையாளத்தையும், கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த சதுக்கம் அமைந்துள்ளது. இந்த நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கத்திப்பாரா சதுக்கத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து பேட்டரி வாகனத்தில் சதுக்கத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*