தமிழ் முதல் மாதம் ‘தை’யா? ‘சித்திரை’யா? அம்பலப்படும் திராவிடவியலாளர்களின் புரட்டு! வேல்ஸ் பார்வை!

0
181

3 Minutes Read :- தை மாதம்தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என திமுக அரசு மீண்டும் அறிவிக்க உள்ளது. தி.., திமுகவினர் வழக்கம்போல இதை ஏற்றாலும், சித்திரையை ஒதுக்க முடியாமலும், தைத் திங்களை ஏற்க முடியாமலும் தமிழ் மக்கள் திணறுகிறார்கள்.

கிறித்துவர்கள் சனவரி -1ஐ புத்தாண்டாகவும், புத்தர் பிறந்த தினத்தை புத்த மதத்தினர் புத்தாண்டாகவும், முஹம்மது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு புலம்பெயர்ந்த நாளை புத்தாண்டாகவும் கொண்டாடுகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளைத்தான் தமிழ் ஆண்டின் தொடக்கமாக தமிழ் இனம் கொண்டாடுகின்றது. இதைதைஎன மாற்றி 2008-ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். 2011-ல் ஆட்சிக்கு வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும்சித்திரையே முதல் மாதம் என அறிவித்தார்.

ஒரு ஆண்டு என்பது 365 நாள், 5 மணி நேரம், 49 நிமிடம், 12 வினாடிகள் ஆகும். வானியல் கணக்குப்படி, சித்திரையே முதல் மாதமாக வருகிறது. ‘திங்களும் நாளும் முந்து கிளந்தென்னஎன்கிறது தொல்காப்பியம். இதன்படி, தொல்காப்பிய காலம் முதலே 12 மாதங்கள் இருந்தது உறுதியாகிறது. நமது முன்னோர்கள் வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்கு முறையைப் பின்பற்றியுள்ளனர்.

தமிழ் ஆண்டின் தொடக்கம் சித்திரை முதல்நாள் தான் என இலக்கிய, கல்வெட்டு சான்றுகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தை முதல் மாதமாக இருந்துள்ளது. பிறகு இது ஆவணியாக மாறி, பின்பு வானியல் கணக்குப்படி சித்திரையாக தீர்மானமானது.

மறைமலை அடிகள்

பின்னோக்கிப் பார்த்தால், கிருஷ்ணர்நாரதர் கூடிப்பெற்ற பிள்ளைகளின் பெயரே பிரபவ தொடங்கி அட்சய வரையிலான 60 ஆண்டுகளுக்கான பெயர்கள், இவை அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்கள், ஆரியர்கள் சொல்வதை ஏற்க முடியாது, தை முதல்நாள்தான் தமிழ் புத்தாண்டு என்கின்றனர் திராவிடவியலாளர்கள். 1921-ல் மறைமலை அடிகள் தலைமையிலும், 1935-ல் பச்சையப்பன் கல்லூரியிலும் நடைபெற்ற தமிழறிஞர்கள் மாநாட்டில், தை மாதம் தான், தமிழ் ஆண்டின் முதல் மாதம் என தீர்மானிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர்கள் கூறுவார்கள். இதன் மூல வேரை ஆராய்ந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

1921 மாநாட்டில், புத்தாண்டு தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானத்துக்கான சான்றாதாரங்களை திராவிடவியலாளர்கள் இதுவரை வெளியிடாததன் பின்னணி என்ன? மாநாட்டில் இந்த இரண்டு தீர்மானங்கள்தான் நிறைவேற்றப்பட்டன. 1. திருவள்ளுவரின் காலம், கிறிஸ்து பிறப்புக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னானது, அதாவது கி.மு.31. ஆகும். 2. திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம்.

அயோத்திதாசர்

ஆங்கிலேயர்கள் காலத்தில் கிடைத்த ராமாயணம், மகாபாரதம் ஒரே மாதிரியாக இல்லாமல், பல விதங்களாக கிடைத்துள்ளது, 8 விதமாக மகாபாரதம் கிடைத்தது, இந்த எட்டிலுமே கிருஷ்ணர்நாரதர் கதை இல்லை என்கிறார் சட்ட மேதை அண்ணல் அம்பேதகர். 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவி பாகவதத்திலும், நாரதர் புராணத்திலும்தான் கிருஷ்ணர்நாரதர் கதை கிடைக்கிறது. அப்படியானால் 300 ஆண்டுகளாகத்தான் இந்தக் கதை உலவுகிறது. எனவே, கிருஷ்ணர்நாரதர் கூடிப்பெற்ற பிள்ளைகளின் பெயரே 60 ஆண்டுகளுக்கான பெயர்கள் என்ற திராவிடவியலாளர்களின் கூற்று அடிபட்டுப்போகிறது.  60 ஆண்டுகளுக்கான பெயர்களும் சமஸ்கிருதம் அல்ல, பாலி மொழி என அயோத்திதாச பண்டிதர் கூறுகிறார்

மேடம் தொடங்கி மீனம் வரையிலான தமிழ் மாதப்பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகிறது. கல்வெட்டுகளிலும் உள்ளது. பங்குனி கடைமாதம் என அகத்தியர் பன்னீராயிரம் கூறுகிறது. கோடை காலமே முதல் பருவம் என சீவக சிந்தாமணி தெளிவுபடுத்துகிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் ஆறு பொழுதுகளில் முதலாவது, இளவேனில் காலம் (சித்திரைவைகாசி). இதன்மூலம் சித்திரைதான் முதல் மாதம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

ஆனால், தைஇத் திங்கள் தண்கயம் படியும்நற்றிணை, தைஇத் திங்கள் தண்கயம் போலபுறநானூறு மற்றும் குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றை இலக்கியச் சான்றாக திராவிடவியலாளர்கள் முன்வைப்பார்கள். இதில், தை மாதம்தான், தமிழ் ஆண்டின் தொடக்கம் என கூறப்பட்டுள்ளதா? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாரூர் கமலை ஞானப்பிரகாசம் எழுதிய புட்பவிதி எனும் நூலில், சித்திரைதான் முதல் மாதம் எனக் கூறுகிறார்.

வேங்கை மரம் பூப்பதை வைத்தும் தமிழ்ப் புத்தாண்டை கணித்திருக்கிறார்கள். ‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கைஎன சங்க நூலான மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. வேங்கை மரத்தில் பங்குனி மாதக் கடைசியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில்தான் பூப்பூக்கும். எனவே தலைநாள் பூத்த என்பது சித்திரை முதல் நாள் ஆகும்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். ஆஸ்திரேலிய அறிஞர் ஏ.எல். பாஷம் எழுதியுள்ள ‘Wonder That Was India’ எனும் நூலில், கார்த்திகை மாத தீபாவளியைத்தான் ஆரியர்கள் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர், வெகுபிற்காலத்தில் சித்திரை மாத தேய்பிறையாக மாற்றிக்கொண்டனர் என குறிப்பிடுகிறார். வரலாற்று அறிஞரான மாலதி ஷென்ஜ், ’The Civilized demons : The Harappan and Rgved’ எனும் தமது நூலில், சித்திரை முதல்நாளில் கொண்டாடப்படும் வருடப்பிறப்பானது, இயற்கை சார்ந்த சடங்குகளை கொண்டுள்ளது, இது ஆரியருக்கானது அல்ல, கார்த்திகை மாதத்தில் அசுரனை வென்று கொண்டாடும் நாள்தான் ஆரியர்களுக்கான புத்தாண்டு என எழுதியுள்ளார்.

இதை நுணுகிப் பார்த்தால், பின்புலத்தில் உள்ள அரசியல் புலப்படும். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை என்பது ஆரியர்களுக்கானது என்ற புரட்டும், திட்டமிட்டு ஆண்டுப்பிறப்பை மாற்றுவதும் ஏன்? விவாதங்களை உள்ளடக்கியதாகவோ, தூய்மைவாதமாகவோ இதைப் பார்க்க முடியாது. அனுமானமாக, சித்திரை என்பது சமஸ்கிருதம் என்றால், அந்த வரிசையில் வரும் தை மாதத்தை மட்டும் தமிழ் என திராவிடவியலாளர்கள் பொருள் கொள்வது எவ்வாறு?

ஒப்பீட்டளவில் திராவிட மாநிலங்களாக முன்பு கூறப்பட்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும், மார்ச்ஏப்ரலை ஒட்டித்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும், எல்லா தமிழ்க் குடிகளுக்கும் பொருந்தும். சித்திரை என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளம், ஓர்மையின் அடையாளம், இன அடையாளம், உணர்ச்சித் திமிர். தமிழ் இனத்தின் மரபுசார் விடயத்தை அரசியலாக்க  முற்படக்கூடாது. வரலாற்றுத் தோற்றுவாயாக உள்ள சித்திரை புத்தாண்டை மாற்ற நினைப்பது, ஆட்சியாளர்களை தமிழின எதிர்ப்பாளர்களாக நிறுவிவிடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*