பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை! தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடு!

0
124

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உள்பட்ட பாஞ்சாகுளம் கிராமத்தில், அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின சிறுவர், சிறுமியருக்கு தின்பண்டங்கள் கொடுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருவதால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Also Read : குழந்தைகளிடையே வேகமாகப் பரவும் காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

அந்த வீடியோவில், வழக்கம்போல பள்ளிக்கு அருகில் இருக்கும் கடையில், மிட்டாய் வாங்குவதற்காகச் சிறுவர்கள் செல்கிறார்கள். அப்போது கடைக்காரர், “நீங்க யாரும் உள்ளூர் கடையில் தின்பண்டம் வாங்கக் கூடாது. ஸ்கூலுக்குப் போங்க., உங்க வீட்ல எல்லோரிடமும், ‘தின்பண்டம் கொடுக்க மாட்டேங்குறாங்க’னு சொல்லுங்க போங்க” என்கிறார்.

வழக்கமாக காசு கொடுத்தால் தின்பண்டம் கொடுக்கும் கடைக்காரர் இன்று ஏதோ சொல்கிறாரே என்கிற குழப்பத்தில் கையில் காசுடன் சிறுவர்கள் கடை முன்பாக நிற்கிறார்கள். அதைப் பார்த்த கடைக்காரர், “கொடுக்க மாட்டாங்கடா, ஊர்ல கட்டுப்பாடு வந்திருக்கு” என்று விளக்கம் கொடுக்கிறார். அதைப் புரிந்துகொள்ளக் கூட பக்குவம் இல்லாத சிறிய வயது சிறுவர்கள், அப்பாவியாக, ‘கட்டுப்பாடா?’ என்று சந்தேகமாகக் கேட்கிறார்கள்

சிறுவர்களிடம் விளக்கம் அளிக்கும் கடைக்காரர், ‘கட்டுப்பாடுன்னா, ஊர்ல ஒரு கூட்டம் போட்டுப் பேசிருக்கு. உங்க தெருவில் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு கூட்டம் போட்டு முடிவு செஞ்சிருக்காங்க, சரியா? போங்க” என்கிறார். எதுவும் புரியாத சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, “இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் பிற்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியலின சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சில வருடங்களுக்கு முன்பு கூட கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் மோதிக் கொண்டனர். கடந்த ஒரு வருடங்களாக எந்த சச்சரவும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் சம்பவம் இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

Also Read : தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

சம்பவம் பற்றிய வீடியோ வைரலானதால் பாஞ்சாகுளம் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்காசி எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி வீடியோவில் பேசும் கடைக்காரரான ராமச்சந்திர மூர்த்தி என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஊரில் சாதிய பாகுபாடு ஏற்படும் வகையில் கட்டுப்பாடு விதித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பாப்பாங்குளம் நாட்டாமை மகேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான கடைக்கும் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி சீல் வைத்தார். இதேபோல் பாஞ்சாங்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(20) என்னும் இளைடரும் கைது செய்யப்பட்டார். அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry