விசாரணைக்குப் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் மரணம்! போலீஸ் தாக்கியதே காரணம் என பரபரப்பு புகார்!

0
175

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணை முடிந்து காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டின் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்து, இளைஞர் ஒருவர் உள்ளே வந்துள்ளார்.

Also Read : தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

இதைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் இளைஞரைப் பிடித்து அருப்புக்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(33) என்பதும், அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

உயிரிழந்த இளைஞர் தங்கபாண்டி

இதுபற்றி அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைத்தனர். தங்கப்பாண்டியை ராமானுஜபுரத்தில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை விடுவித்ததை கண்டித்து MDR நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Also Read : வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

அதையடுத்து, காப்பகத்தில் இருந்த தங்கப்பாண்டியை நேற்று முன்தினம் இரவு போலீஸார் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். காலை ஐந்து மணி அளவில் தங்கபாண்டியனின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதைக் கண்டு மனநல காப்பகத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலாதேவி மற்றும் குடும்பத்தினர், போலீஸார் தங்கப்பாண்டியனை அடித்து கொலை செய்து விட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி. மனோகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry