வருமான வரிப்பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி! ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!

0
498
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஐபெட்டோ அண்ணாமலை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி ஏற்படுவதாகவும், பழைய முறைப்படியே வருமான வரி கணக்கீடு செய்து பிடித்தம் செய்யுமாறும் ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக, தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு அவர் விரிவான கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இந்தியத் திருநாட்டிலேயே வருமான வரியை மிகச் சரியாக செலுத்தி வருபவர்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை IFHRMS மென்பொருளானது மாதம்தோறும் தானாகவே கணக்கிட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்பட இருக்கிறது. இப்படித் தானாகவே வருமான வரி கணக்கீடு செய்யும் முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு மொத்தமே ₹18500/- வருமான வரி கட்டிய ஆசிரியர் ஒருவருக்கு, இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் ₹10,500/- வருமான வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு மட்டும் ₹8,000 அதிகம் பிடிக்கப்பட்டுள்ளது.

Also Read : பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!

தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காக உருவாக்கப்பட்ட IFHRMS மென்பொருளில், வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை இருமடங்கு அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த IFHRMS மென்பொருள் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? ஏன் இத்தனை குளறுபடிகள் இந்த IFHRMSஇல் இன்னமும் நீடித்து வருகிறது? என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கேள்விக்கணைகளை எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்களுக்கு IFHRMS மென்பொருள் வழியாக ஊதியப் பட்டியல் பெறப்பட்டு, மாதாந்திர ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாதம் தோறும் வருமான வரியும் அதற்கான செஸ் வரியும் பிடிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி மாதத்தில் இந்த நடைமுறையே இருந்தது. இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை.

Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

தற்போதோ, வரி பிடித்தம் செய்யப்படுவர்களுடைய வீட்டுக் கடன், மருத்துவக் காப்பீடு, படிப்புக் கட்டணம் ஆகிய எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல், புதிய முறைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியினை திரும்பப் பெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல என்பதை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடந்த காலங்களில் அனுபவப்பட்டு இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை பாதிக்கக்கூடிய, மாதம்தோறும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் முறையினை ரத்து செய்துவிட்டு, எப்போதும் போல ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் புதிய முறைப்படியோ? அல்லது பழைய முறைப்படியோ? வருமான வரி கணக்கீடு செய்து தாக்கல் செய்யும் பழைய நடைமுறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதித்துறை அமைச்சரை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry