திருக்கடையூரில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்! கங்கை அமரன், பாரதிராஜா பங்கேற்பு!

0
450

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் 60, 70, 80 மற்றும் 100 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் விருத்தி ஆகிய ஹோமங்களை செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.
அதன்படி 80 வயதை பூர்த்தி செய்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று அக்கோயிலில் சதாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு இளையராஜா தனது குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார். அவருக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோ பூஜை மற்றும் கஜ பூஜைகளில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் சிவாச்சாரியார்களால் சிறப்புடன் நடத்தப்பட்டன.

இன்று காலை சதாபிஷேகத்திற்கான இரண்டாம் கால பூஜைகள் காலை 6 மணிக்கு தொடங்கின. குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை தந்த இளையராஜாவை வரவேற்ற சிவாச்சாரியார்கள் சதாபிஷேகத்துக்குரிய கலச பூஜைகள் உள்ளிட்டவற்றை முறைப்படி செய்தனர். அதனைத் தொடர்ந்து கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் இளையராஜாவுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு அபிராமி அம்மன் சன்னதி மற்றும் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் வழிபாடு நடைபெற்றது.

இதில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry