கால்வாயைக் காணவில்லை! மாநகர கவுன்சிலர் புகார்! கைபிசையும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்!

0
130

காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் காணாமல் போன கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டையில் இருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மழை நீர் நெடுஞ்சாலையை கடக்கும் வகையில் இந்த கால்வாயில் சிறு பாலமும் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென கால்வாய் பகுதி முழுவதையும் அப்பகுதியைச் சார்ந்த ஒரு சிலர் ஆக்கிரமித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

சிறிய அளவில் சென்று கொண்டிருந்த கால்வாயையும், தற்பொழுது முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்டு விட்டதால் மழைநீர், கழிவு நீர், வெளியே செல்ல முடியாமல் தேங்கி, அந்தப் பகுதி கொசு உற்பத்தி கூடமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் கால்வாய் காணாமல் போனது குறித்து கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாமன்ற உறுப்பினர் ஷாலினியிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் பகுதியை பார்வையிட்ட ஷாலினி, மழைநீர் கால்வாய் காணாமல் போயுள்ளதை கண்டறிந்தார்.

இதையடுத்து, மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாமன்ற உறுப்பினர் ஷாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry