31 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமின்! மத்திய அரசின் எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் உத்தரவு!

0
131

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒரு மாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் பேரறிவாளன் வெளியே வந்திருந்தார். பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மே 28-க்குப் பின் 10-வது முறையாக கடந்த மாதமும் பரோல் நீட்டிக்கப்பட்டது.

கோப்புப் படம்

தனக்கு விடுதலை அளிக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மத்திய அரசு தரப்பில், அவரது விடுதலைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன் தரப்பு :- பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார், எனவே இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்.

நீதிபதிகள் :- பேரறிவாளன் தற்போது பரோலில் தானே உள்ளார்?

பேரறிவாளன் தரப்பு  :- பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க வேண்டும், பரோலில் இருந்தால் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் உள்ளார்.

நீதிபதிகள்  :-  இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளதா?, அவரின் அதிகாரம் என்ன? என்பது தொடர்பாக தீர ஆராய வேண்டியுள்ளது.பேரறிவாளனுக்கு ஜாமின் கொடுப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு விசாரித்து முடிவெடுக்கப்படும்.

பிற்கல் 2 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் :- பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. இவரது விடுதலை தொடர்பான தமிழக அசின் தீர்மானம் குடியரசு தலைவரிடம் முடிவுக்காக உள்ளது.

நீதிபதி :- பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளாரே ?

மத்திய அரசு :- ஏற்கனவே பேரறிவாளனுக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுளாக குடியரசு தலைவரால் மாற்றப்பட்டது. அவருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. எனவே தற்போது ஜாமின் வழங்க கூடாது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது.

குடியரசுத் தலைவர்  72வது அரசியலமைப்பு பிரிவின் தனது தனிப்பட்ட அதிகாரத்தை  பயன்படுத்தியே முடிவெடுக்க முடியுமே தவிர ஆளுநர் முடிவெடுக்க முடியாது.

இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும்போது, தமிழக அரசு முடிவெடுக்கவும் முடியாது.

பேரறிவாளன் தனக்கான சலுகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டார். இரண்டாவது முறையாக அவர்  பயன்படுத்த முடியாது.

நீதிபதிகள் :- தண்டனை குறைப்பு உச்சநீதிமன்றம் வழங்கியது தானே ?

மத்திய அரசு :- ஏறகனவே அவருக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது, தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையிலிருந்து விடுவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பேரறிவாளன் விவகாரத்தில் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளதே தவிர வேறு எவரும் முடிவெடுக்க முடியாது. அதேவேளையில் பரோல் வழங்குவது சிறை Manuel-படி மாநில அரசு வழங்கலாம். சிறை விதிகளுக்கு உட்பட்டு பரோல் வேண்டுமானால் வழங்கப்படலாமே தவிர நிச்சயம் ஜாமீன் வழங்க முடியாது.

நீதிபதிகள் :- கொலை வழக்கில் 302ன் கீழ் சிறையில் உள்ள ஒருவரை குடியரசு தலைவர் எவ்வாறு விடுவிக்க முடியும் ?

மத்திய அரசு :-  இந்த வழக்கில் ஆயுதம், வெடிகுண்டு, வெளிநாட்டு தொடர்பு என பல உள்ளன. இது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது ஆகும். சம்மந்தப்பட்ட அரசு தான் விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றமே வேறு ஒரு வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது:

நீதிபதிகள் :- அப்படி பார்த்தால் அந்த அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது என கருத முடியும், ஏனெனில் இது 302வின்  கீழ் உள்ள கொலை வழக்காகும்.

மத்திய அரசு :- இல்லை, அப்படி இல்லை, வழக்கு விசாரணை, வெளிநாட்டு தொடர்பு உள்ளிட்டவை அடங்கியுள்ளதால் மத்திய அரசுக்கே அதிகாரம்

நீதிபதிகள் :-  அதிகாரம் குறித்து பிறகு விசாரிக்கிறோம், இப்போது ஜாமீன் தொடர்பாக விசாரிப்போம், எனவே ஜாமின் தொடர்பாக வாதிடுங்கள்.

தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி:- அரசியல் சாசன பிரிவு 161ன் படி கொலை வழக்கில் ஆளுநருக்கே முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. தேசதந்தையை கொலை செய்த கோட்சே கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்.

பேரறிவாளன் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் :- பேரறிவாளனுக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்ட போதும் அவர் விதிகாளுக்கு உட்படு சரியாக நடந்து கொண்டுள்ளார். சிறையிலும் நன்னடத்தையாக தான் இருந்துள்ளார், எந்த புகாரும் அவர் மீது இல்லை.

தற்போது பரோல் வழங்கப்பட்டாலும் அவரால் எவரையும் சந்திக்கவோ , பேசவோ முடியாத அளவு கட்டுப்பாடு உள்ளது. 32 ஆண்டுகள் சிறையில் உள்ள அவருக்கு ஒரு நிவாரணமாக ஜாமின் வழங்க வேண்டும்.

நீதிபதிகள் :- பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. அதேவேளையில், பேரறிவாளன் தான் வசிக்கும் பகுதியில்  உள்ள காவல் நிலையத்தில் (ஜோலார் பேட்டை) மாதம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும்.வழக்கின் இறுதி முடிவுக்கு அனைத்து முடிவுகளும் கட்டுப்பட்டது. பேரறிவாளன் விடுதலை செய்யக்கோரிய பிரதான வழக்கு  அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.

பேரறிவாளனுக்காக தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி வந்தவர் அவரது தாயார் அற்புதம் அம்மாள்.

பேரறிவாளன் உட்பட எழுவரின் விடுதலை குறித்த குடியரசு தலைவர் ஆலோசனை பெறும்வரை ஜாமின் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து, நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கும் ஜாமின் கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Perarivalan (extreme left) Murugan (extreme right) Santhan (2nd from right), along with Jayakumar, robert Paes and Ravichandra, in Vellore Cengtral Prison for Men. (Courtesy – The New Indian Express)

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு 1999 மே மாதம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பெல்ட் வெடிகுண்டைதயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 8 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கருணை மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததால் 2014 ஆம் ஆண்டில், பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry