ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

0
130

உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read : தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது! கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் சூழல்!

அப்போது, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிக்கள் தான் என குறிப்பிட்டதுடன், நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் தான் என தெரிவித்தார். முதன்மை செயலாளர் முறையாக செயல்பட வேண்டும், வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது என குறிப்பிட்ட நீதிபதி, நடவடிக்கை அவசியம் என்றார்.

மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது, 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று அவர் வேதனை தெரிவித்தார்.

Also Read : போதை கும்பலுடன் கைகோர்த்தால் கடும் நடவடிக்கை! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

ஆர்டர்லிகளாக உள்ளவர்கள் இது குறித்து எதுவும் பேசமாட்டார்கள், ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என வேதனையை வெளிப்படுத்தினார்.

ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எச்சரித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry