108 ஏக்கர் மலை, ‘ஜெபமலை’ ஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்!   

0
1058

மதமாற்றத்துக்கு பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய மோகன் சி லாசரஸ், தென்காசி மாவட்டம் கடையம் அருகே 108 ஏக்கர் மலைப்பகுதியை, ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளன.   

தென்காசி மாவட்டம் கடையத்துக்கு அருகே உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தோரணமலையில்தான் அகத்திய மாமுனி, தனது சீடரான தேரையருக்கு, சித்த மருத்துவத்தை போதித்ததாக நம்பப்படுகிறது. இந்த ஊருக்கு அருகில், வனத்தை ஒட்டிய மாதாபுரம் என்ற இடத்தில், மோகன் சி லாசரஸ் நிலம் வாங்கியுள்ளார். தான் வாங்கிய நிலம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள இடங்களையும், மலையையும் சேர்த்து 108 ஏக்கரை அவர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தான் வாங்கிய இடத்தில் கட்டிடம் கட்டியுள்ள அவர், அருகில் உள்ள இடங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மலையில் வழிபாட்டுக் கூடங்கள் அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதை கிறித்துவ நகராக நிர்மாணிக்கும் பணிகளை மோகன் சி லாசரஸ் செய்து வருவதாகவும், அந்த இடத்துக்குள் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது (அனைவரையும் அனுமதித்தால் உண்மை வெளிவரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்!) எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆழ்ந்த கிறித்துவ ஈடுபாடு கொண்டவர்களை மட்டும் அனுமதித்து, அங்குள்ள மலைகளில், அவர்களது கூற்றுப்படி ஜெபமலையில் வழிபாடு நடத்துகின்றனர்.

இந்த ஜெபமலை பற்றி மோகன் சி லாசரஸ் நடத்தி வரும் “Jesus Redeems” என்ற அமைப்பின் வெப்சைட்டில் (www.jesusredeems.com) குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “மோகன் சி லாசரஸ் வழிபாட்டில் இருந்தபோது, அவரிடம் பேசிய ஆண்டவர், மலைப்பகுதி ஒன்றை தருகிறேன், அதை ஜெபமலையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். உறுதியளித்தபடி 2002-ம் ஆண்டு குற்றாலத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கீழமாதாபுரத்தில் மலைப்பகுதியை ஒட்டி 100 ஏக்கர் இடத்தை ஆண்டவர் கொடுத்தார். அதை “Jesus Redeems” அமைப்புக்கு மோகன் சி லாசரஸ் இலவசமாக கொடுத்துள்ளார்என குறிப்பிடப்பட்டுள்ளது. (நிலம் வாங்கி தனது அமைப்புக்கே இலவசமாக கொடுத்துள்ளார்!)

“Prayer Walk Garden”, “Prayer Tower”, “Prayer Village”, மூன்றாயிரம் பேர் அமரக்கூடிய “Prayer Palace”, Gethsemane Prayer ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. இரண்டு வழிபாட்டுக் குகைகள், அமைக்கப்பட உள்ளன. வழிபாட்டுக்கு வருவோர் தங்குவதற்காக ‘Mordecail’, ‘Esther’ ஆகிய பெயர்களில் தங்கும்விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன

வனப்பகுதியை ஒட்டி நிலம் வாங்கிய மோகன் சி லாசரஸ், வனத்துறைக்கு சொந்தமான இடங்களையும், மலைகளையும் ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படுவது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாதாபுரம் பகுதியில் வசிக்கும் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக பணியாற்றி வரும் The Legal Rights Protection Forum என்ற தன்னார்வ அமைப்பு, ஜெபமலைக்காக வனத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளது. அதேபோல் மத வெறுப்பை தூண்டுதல் மற்றும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக “Jesus Redeems” அமைப்பின் லைசென்ஸை ரத்து செய்யுமாறு கோரியுள்ளது. இந்தப் புகார் பற்றி Jesus Redeems அமைப்பு விளக்கம் அளித்தால் அதை வெளியிடவும் வேல்ஸ் மீடியா தயாராக இருக்கிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry