கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு 7 நாள் ஹோம் குவாரன்டைன்! தமிழக அரசு அறிவிப்பு!

0
12

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி கோவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் தங்களை 7 நாட்கள் கட்டாயமாக வீட்டுத்தனிமையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த 7 நாட்கள் தங்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில், காய்ச்சல், சளி, மூச்சுத்தினறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

பிறமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தங்களை 14 நாட்கள் தங்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும். அதேபோல், பிரிட்டன், ஐரோப்பா, மேற்கு ஆசிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும். இந்தியா வருவதற்கு முன்னதாக 14 நாட்களில் தாங்கள் மேற்கொண்ட பயணம் குறித்தும் அந்த இணையத்தில் குறிப்பிட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்தப் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியும். அதன் பின்னர் அவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். 2வது பரிசோதனை முடிவும் நெகட்டிவ் என வந்ந்தால் அவர்கள் அடுத்த 7 நாட்கள் தங்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு அறிவுறுத்தி அன்றாட வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்எனத் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry