குருவைக் கண்டறியும் எளிய வழிமுறை! ஞானிக்கு குருவான நாய்! சிந்தனையைத் தூண்டும் சிறிய கதையுடன் எளிமையான விளக்கம்!

0
79
Who are the best spiritual guru and how to find him? | Getty Image

3.30 Minutes Read : குரு என்பவர் யார்? ஆன்மிகத் தேடலில் இருப்போர் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது…! முதலில் குரு என்பவர் யார்? என்பதைப் பார்ப்போம்.

1)தன்னை உணர்ந்தவரா? 2)அன்பானவரா? 3)அஷ்ட மகா சித்துகள் பெற்றவரா? 4)ஆண்டவனையே கண்டவரா? 5)கையில் தடியுடன், முகத்தில் தாடியுடன், காவியும் தரித்து திருநீறணிந்து காடுமலைகளில் கடுந்தவம் புரிபவரா? 6) ஜீன்ஸ் அணிந்து மோட்டார் வாகனத்தில் பறந்து, பகட்டான உடையுடன் மெய்சிலிரிக்கும் ஆன்மிக உரை நிகழ்த்தி அவ்வப்போது சின்னத்திரையில் உங்களுக்கு தரிசனம் தருபவரா? 7) யோகா வகுப்புகள் மூலம் புதிய கோணத்தில் விளக்கம் தருபவரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒரு சிறு கதையின் உள்ளே இருக்கிறது. முன்னொரு காலத்தில் ஞானம் பெற்ற குரு ஒருவர் இருந்தார். அவர் இறக்கும் தருவாயில் இருந்தபோது, சீடர்கள் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினார்கள். எங்களுக்கெல்லாம் நீங்கள் குருவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் குரு? என்று கேட்டனர்.

அந்த குரு சிரித்துவிட்டார். எனக்கு ஆன்மீகத்தில் எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள், ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூன்று பேரை கட்டாயம் சொல்ல வேண்டும். என் முதல் குரு ஒரு நாய். ஒருமுறை நான் ஆன்மீகத்தைத் தேடி, எல்லாவற்றையும் துறந்து அலைந்து கொண்டிருந்த சமயம்; அது ஒரு காடு. அப்போது எனக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது, அருகிலேயே ஒரு சிறிய நீரோடை இருந்தது.

Also Read : எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

சரி நீர் குடிக்கலாம் என அதன் அருகே சென்றேன். அப்போது அங்கே ஒரு நாய், நீரோடைக்கு போவதும் திரும்புவதுமாக இருந்தது. உற்று கவனித்தேன், அது மிகவும் களைப்பாக இருந்தது. அதற்கும் நிறைய தாகம் போலிருந்தது. ஆனால் நீரோடைக்கு போனதும் அங்கே நீரில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் திரும்பி வந்துவிட்டது. ஆனால் தாகம் துரத்தியது. திரும்பவும் நீரோடைக்குச் செல்கிறது. இப்படி போவதும் வருவதும், போவதும் வருவதுமாக இருந்தது.

நாய் களைத்துப் போய் விட்டது. இருந்தும் தாகம் மேலிடவே அந்த நாய் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தது. பயம் தெளிந்தது, தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நம் தாகத்தைத் தணிக்க விடாமல் செய்வது பயம் மட்டுமே; ஆனால் தாகம் மேலிடும் போது நமக்குள் உருவாகும் தைரியமானது பயத்தை உடைத்து விடுகிறது என அறிந்து கொண்டேன், அதனால் அந்த நாய்தான் என் முதல் குரு.

Representative Image

இரண்டாவது குரு யார் என அந்த ஞானியை சீடர்கள் கேட்டனர். அவர் சொன்னார், எனது இரண்டாவது குரு ஒரு திருடன். என்ன… திருடன் குருவாக முடியுமா? என்று சீடர்கள் திகைப்புடன் கேட்டனர். அவர் புன்னகையுடன் பதில் சொல்லத் தொடங்கினார். அந்தக் காட்டில் பசி மிகுதியால் நான் மிகவும் களைப்புற்று சோர்ந்து கிடந்தேன். அப்போது ஒருவர் வந்து என்னை கைத்தாங்கலாகத் தூக்கி அருகிலிருந்த தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

எனக்கு உண்ண உணவும், குடிக்க நீரும் தந்தார். நான் நன்றி மிகுதியால் அவரைப் பார்த்தேன். ‘சாமி நீங்க யார்‘ என்று என்னை கேட்டார். அதைத்தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன் எனப் பதில் சொன்னேன். அவருக்கு அது புரியவில்லை. பின்னர் சற்று தயக்கமாக ‘நீங்கள் யார்’ என்று நான் கேட்டேன். ‘நான் ஒரு திருடன்’என அவர் சொன்னார்.

மேலும், உங்களுக்கு தயக்கம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை இங்கேயே தங்கலாம் என்று கூறினார். நானும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டேன். அன்று இரவு அவர் தன் தொழிலுக்குக் கிளம்பினார், மறுநாள் காலையில் வந்தார். என்னப்பா தொழில் எப்படி? ஏதாச்சும் கிடைச்சதா? என்றேன்.

இன்னைக்குக் கிடைக்கல சாமி நாளைக்குக் கண்டிப்பா கிடைக்கும் என்றார். மறுநாளும் தொழிலுக்குச் சென்றார், திரும்பி வந்ததும் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். இன்னைக்கு இல்ல சாமி நாளைக்குக் கண்டிப்பா கிடைக்கும் என்று பதில் சொன்னார். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் எனது அதே கேள்வியும், அவரது அதே பதிலும் தொடர்ந்தது.

அன்றுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். சாதாரண பொருளைத் தேடக்கூடிய (திருடக்கூடிய) திருடனுக்கே இவ்வளவு பொறுமையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது என்றால், மிகப்பெரிய செல்வமாகிய ஞானத்தைத் தேடக்கூடிய எனக்கு எவ்வளவு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்பதைத் தெரிந்து கொண்டேன். அதனால் அந்தத் திருடன் தான் எனது இரண்டாவது குரு.

Also Read : பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!

சீடர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. அப்போ அந்த மூன்றாவது குரு யார்? என்று கேட்டனர். அந்த ஞானி சொன்னார், நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகு ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது அந்த வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த குழந்தையிடம் என் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காக, பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எங்கிருந்து வந்தது தெரியுமா? எனக் கேட்டேன். அந்தக் குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு, ‘தாத்தா… இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ, அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது’ என பதில் சொன்னது. ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் எனக் கர்வம் கொண்டிருந்தேன். அதைத் தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல, குரு என்பது ஒரு தன்மை, இருளை அகற்றும் மின்னல் கீற்று. அஞ்ஞானம் போக்கும் அறிவு..! குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்ய முடியாது. அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை, ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்குக் கூறவில்லை, வித்தையில் சிறந்த துரோணருக்குக் கூறவில்லை, பக்தியில் சிறந்த விதுரனுக்குக் கூறவில்லை, பின் யாருக்குத்தான் கூறினார்? தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

Representative Image

இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம். ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் நமக்குத்தான் தெரியுமே! அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம். ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

அர்ஜுனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால், கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லாமல் அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது. இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்கக் கூடிய சிவபெருமான் கூட, தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னைச் சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

ஆகவே இங்கு ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல, சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது. எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும். மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது.

Archimedes, Greek Mathematician

கிரேக்க ஞானி டயோனிஸுக்கு ஒரு நாய்தானே குரு. நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு. ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு. உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு நட்சத்திரங்களைப் பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே. அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை, ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை. தவித்தவன் தண்ணீரை தேடிப் பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது. தன்னைத் தகுதிப்படுத்தி  கொண்டவன், தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry