பாரத் எனப் பெயர் மாறும் இந்தியா? தவறில்லை என்கிறது திமுக!

0
100
India vs Bharat renaming row: Opposition reacts, Centre supports and netizens confused

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், இந்த மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இது எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. பாரதம்தான் நமது அறிமுகம். அதில் எங்களுக்கு எப்போதுமே பெருமிதம். பாரதம் என்பதற்கு குடியரசுத் தலைவர் முன்னுரிமை அளித்திருக்கிறார். காலனிய ஆதிக்க மனோபாவத்தில் இருந்து வெளிவருவதற்கான மிகப் பெரிய அறிவிப்பு இது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 1-ஆம் தேதி சக்கல் ஜெயின் சமாஜத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்ற சொல்லையே நாம் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். மொழிகள் என்னவாக இருந்தாலும் பண்டைய காலம் முதல் பாரத் என்ற பெயர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார். அதற்கேற்பத்தான் ‘President of Bharat’ என அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து செய்து வருகின்றனர்.

ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Also Read : பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அந்தச் செய்தி உண்மைதான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9 நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வந்துள்ளது. அதில் வழக்கத்துக்கு மாறாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 1 இனி இந்தியா என்றழைக்கப்பட்ட பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என வாசிக்கப்படும்போல. மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதுபற்றி காங்கிரஸார் ராகுல் காந்தியிடம்தான் முதலில் கேட்க வேண்டும். தான் மேற்கொண்ட நடைபயணத்துக்கு, இந்தியா ஜோடோ யாத்ரா என பெயரிடாமல், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என ஏன் பெயர் வைத்தீர்கள் என ராகுலை காங்கிரஸ் தலைவர்கள் கேட்க வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா? என்றால், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1-இல், “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1 ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ இரண்டையும் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அங்கீகரிக்கிறது.

பாரத் என பெயர் மாற்றம் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பிறப்பித்த உத்தரவில்,”பாரதம் மற்றும் இந்தியா இரண்டுமே அரசியலமைப்பில் கொடுக்கப்பட்ட பெயர்கள். அரசியலமைப்பில் இந்தியா ஏற்கனவே ‘பாரத்’ என்று அழைக்கப்படுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவை பாஜக எம்பி நரேஷ் பன்சால், சிறப்புக் குறிப்பு மூலம், இந்தியா என்ற வார்த்தையை காலனித்துவ அடிமைத்தனத்தின் சின்னம் என்று வர்ணித்தார். இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரினார். இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு, நாட்டின் பழங்காலப் பெயரான ‘பாரத்’ என்று அழைக்கப்பட  இதுவே சரியான நேரம் என்று பாஜகவின் பல பெரிய தலைவர்கள் நம்புகிறார்கள்.

Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் பொருளாளரும், திமுக மக்களவை குழுத் தலைவருமான டிஆர் பாலுவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு, “பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தை ரொம்ப நாளாக இருக்கிறது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. ஏனென்றால் பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. அரசியலமைப்பில் இருப்பதை நாம் இல்லை என கூற முடியாது.

எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இண்டியா’ என கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளோம். ‛இண்டியா’ என்ற பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்திலும், அதற்கு முன்பும் இருக்கிறது. இதனை ஒருசில நாட்களில் மாற்றியமைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் மாற்றியமைக்க முடியாது. இந்தியாவை பாரத் என அழைக்க மசோதா கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பாரத் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது” இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry