பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கம்!

0
299

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை மிகவும் இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சில தினங்களுக்கு முன் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மேலும் 6 பேரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில் ராகுல்காந்தி கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry