இயற்கை உபாதைகளை அடக்கச் சொல்வது மனித உரிமைக்கு எதிரானது! மனம் இரங்குமா டி.என்.பி.எஸ்.சி.!

0
376

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மிக நல்ல செய்தி.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம்; குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் குரூப்-2 தேர்வுக்கு 10 லட்சம் பேர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போதுமே, தேர்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்யும். அநேகமாக வேறு எந்தத் தேர்வாணையத்தை விடவும் மிக நேர்த்தியாக நடத்தும். இது விஷயத்தில், ‘டிஎன்பிஎஸ்சி’யின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது. ஆனாலும், ஒரு மிக முக்கிய அம்சத்தை கவனத்தில் கொள்ளாதது கவலை கொள்ளச் செய்கிறது.
அதுதான் – ‘இயற்கையின் அழைப்பு’.

எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். அத்தோடு, தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்தில் தத்தம் இருக்கையில் வந்து அமருமாறு தேர்வுகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையும் சேர்த்தால் தொடர்ந்து நான்கு மணி நேரம், ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். இடையில் ஓரிரு நொடிகள் எழுந்து நிற்கக் கூட அனுமதி இல்லை. இதுஎத்தனை சிரமங்களை ஏற்படுத்தும்?

காலை 9.30 மணிக்குத் தேர்வு தொடங்குகிறது. 8:30 மணிக்குத் தேர்வர்கள் தமது இருக்கைக்கு வந்தாக வேண்டும். இதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாக வீட்டை விட்டுக் கிளம்பி இருப்பார்கள். உடல் உபாதைகளால் ஏற்படும் சிக்கல், தேர்வர்கள் சந்திக்கும் படுமோசமான சவால்.

தேர்வு நேரத்தின் போது ‘இயற்கை அழைப்பு’, காரணமாகத் துடிதுடிக்கப் பதட்டத்துடன் தென்படும் பலரை, தேர்வுக் கண்காணிப்பாளராக, எனது அனுபவத்தில் நானே பலமுறை பார்த்து இருக்கிறேன். அனுமதிக்கப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டு இயன்றவரை உதவியும் இருக்கிறேன்.

கோப்புப் படம்

தமது வருங்காலத்தை நிர்ணயிக்கிற மிக முக்கியமான போட்டியில், ஏராளமான கனவுகளைச் சுமந்து கொண்டு, மிகச் சிறந்த முறையில் தயார் செய்துகொண்டு, தேர்வை எதிர்கொள்கிற இளைஞர்களை ‘பாடாய்ப் படுத்துகிற’ சோதனையான ‘அனுபவம்’ இந்த இயற்கை அழைப்பு.
குறிப்பாகப் பெண் தேர்வர்கள் ‘சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்’ படுகிற அவஸ்தை சொல்லி மாளாது.

தமது அறிவுக்கான போட்டிக் களமாகத் தேர்வை எதிர்பார்த்து வருகிற தேர்வர்கள், தமது ‘உடல் தகுதி’, ‘தாங்கும் சக்தி’யைச் சோதிக்கிற பரிசோதனைக் கூடமாக அது மாறிவிட்டதைப் பரிதாபத்துடன் கண்கலங்க எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இந்த அவல நிலை இன்னும் தொடர்கிறது – அதுவும் ஒரு மணி நேரம் கூடுதலாக!

இயற்கை அழைப்புகளையே கூட விடுங்கள். ஒரே இடத்தில், உட்கார்ந்த நிலையில் நான்கு மணி நேரம்! சர்வ வல்லமை பொருந்திய பெரிய மனிதர்களை இவ்வாறு உட்காரச் சொல்ல வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு இதன் கடுமை புரியும், மாண்பமை நீதிமன்றங்கள் சுயமாக இந்த பிரச்சினையை கையில் எடுக்கலாம். ஆனால் உணர்ச்சி பூர்வமான சம்பவங்களில் காட்டுகிற அக்கறையை, அறிவுபூர்வ கோரிக்கைகளில் காட்டுவது இல்லை. வாழ்க!

இதிலே கவனத்தில் கொள்ள வேண்டியது – டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத, பல பிரிவினருக்கு, வயது உச்சவரம்பு இல்லை. நல்லதுதான். ஆனால், 40 வயதை கடந்த தேர்வர்கள், நான்கு மணி நேர ‘சித்திரவதையை’ சகித்துக் கொள்ள வேண்டும். இது எந்த வகையில் நியாயம்? உண்மையில் இது மனித உரிமைகளுக்கு, மனித நாகரிகத்துக்கு எதிரானது.

மூன்று மணி நேரத் தேர்வு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். இது ஒன்றும் கடினமான பணி அல்ல. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது – மொழிப் பிரிவு, பொதுப் பாடப் பிரிவு. இரண்டுக்கும் இடையே சில நிமிட இடைவெளி மிக நிச்சயம் சாத்தியம்தான்.

கோப்புப் படம்

இதுவும் அல்லாமல், பல மையங்களில் தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தனித்தனி கழிப்பறைகள் இருப்பது இல்லை. பல இடங்களில் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் எப்போதுமே பிரசினை!

இளம் தேர்வர்களுக்கு மிகப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்தப் பிரசினைக்குத் தீர்வு காணத் தேர்வாணையம் உடனடியாக முனைந்தால் பெருத்த மனிதாபிமான உதவியாக இருக்கும். குறைந்தபட்சம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை, தேர்வு மையக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர்களுக்கு விரிவாகத் தெரியப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு தொடர்பான ஒவ்வொரு அம்சத்திலும் துல்லியமாகத் திட்டமிட்டுத் திறம்பட செயல்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இயற்கை உபாதைகளுக்கு நல்ல தீர்வு காண வேண்டும். இது எல்லாருக்குமான இயற்கை நீதி!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

கட்டுரையாளர் – பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி. பிரபலமான போட்டித் தேர்வுப் பயிற்சியாளர். ’வழி நெடுக வைரங்கள்’, ’நேர்வ வழியில் நூறு’, ‘எதிர்கொள்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry