தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி ஆர்.எஸ்.பாரதி மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி மனுதாக்கல் செய்தார். வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றபோது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், பட்டியலின மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி தரப்பில் வாதிடப்பட்டது.
![](https://velsmedia.com/wp-content/uploads/2021/02/download-11.jpg)
எனினும், புகார்தாரர் தரப்பில் வாதிடுகையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சு மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவையும் அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை தினமும் நடத்தி தாமதமின்றி முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷத்தை கக்குவது வழக்கமாகி விட்டதாகவும் நீதிபதி சதீஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry