சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் இ உண்டி வசதியும் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்த 50000 பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பின்னர் வருகிற 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.
பக்தர்கள் வழக்கம்போல sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ‘ஸ்பாட் புக்கிங்‘ வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் வராமல் இருந்தால், முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளாவில் பலத்த மழை காரணமாக பக்தர்களின் வருகை குறைந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக பல கட்டங்களாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 10 முதல் 18 வயதிற்கு உட்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டுவர வேண்டும்.
ஆனால், ஆன் லைனில் முன்பதிவு செய்துதான் வரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நிலக்கல் உள்பட 10 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன் லைனில் முன்பதிவு செய்யாமலேயே இங்கு வந்து நேரடியாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி அடையாள அட்டை நகலை வைத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும், பக்தர்களுக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்வம் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இ–உண்டி வசதி அதாவது கூகுள் பே(Google Pay – 9495999919) மூலமாக மின்னணு பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 22 இடங்களில் QR கோடு டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதன் மூலம் காணிக்கை செலுத்தலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry