ரெய்னா செய்த தவறென்ன? தோனி ஏன் கைவிட்டார்? அம்பலப்படுத்திய நியூசிலாந்து மாஜி வீரர்!

0
113

சி.எஸ்.கே. ரசிகர்களால் சின்ன தல என்று கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னாவை, ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ரெய்னா செய்த மிகப்பெரிய தவறுதான் இதற்குக் காரணம் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துள்ளது. சிஎஸ்கே வாங்கிய 21 பேரில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும், 14 பேர் உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகும் ரூ. 2.85 கோடி மீதம் இருந்தது.

இந்த தொகையை பயன்படுத்தி ஷாருக்கான் போன்ற திறமையான வீரர்களை கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். சுரேஷ் ரெய்னாவைக் கூட அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கலாம். ஆனால், சிஎஸ்கே அந்த தொகையை மிச்சப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏன் வாங்கவில்லை என்பது தொடர்பாக நியூசிலாந்து அணி முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டுல் (Simon Doull) பேசியுள்ளார். அதில், “ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருந்தாலும், தோனியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது அவர் அணியிலிருந்து விலகியிருக்கக் கூடாது. விலகியதால்தான் தோனிக்கும், நிர்வாகத்திற்கும் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரர் மீது நம்பிக்கை போய்விட்டால், பின்னர் மீண்டும் அணியில் சேர்க்க மாட்டார்கள். ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக அணியிலிருந்து விலகியதாக கூறினார், ஆனாலும் அதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம். அதன் பின்னர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதும், அவர் தனது திறமையை நிரூபிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

ரெய்னா 14ஆவது சீசனின்போது சிஎஸ்கேவில் இணைந்துகொண்ட பிறகு பெரிய ஸ்கோர்களை அடிக்க திணறி வந்தார். ரெய்னாவை வாங்காதது குறித்துப் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், “அணியில் எதிர்கால திட்டத்தில் ரெய்னாவின் பங்கு இல்லை என்பதால்தான், அவரை ஏலத்தில் எடுக்கவில்லை” எனக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry