நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்! `நீட்’ தேர்வு பலிபீடம்’! முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

0
111

“நீட் தேர்வு என்பதைவிட, அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினர். பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது எனபது குறித்து அ.தி.மு.க – தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பின்னர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேசினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தீர்மானத்தை இன்றே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த சபாநாயகர்  அப்பாவு, நாள் குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல. 2010ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்ட போதே திமுக கடுமையாக எதிர்த்தது. நீட் தேர்வு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று 2013ல் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ல் பாஜக ஆட்சி மத்தியில் வந்தபோது அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது.

நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக அரசுதான். நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமானது; அவர்களின் நன்மைக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் பயிற்சி பெற முடியாதவர்களை மருத்துவம் படிக்க முடியாமல் நீட் தேர்வு தடுக்கிறது. ஆள்மாறாட்டம், விடைத்தாளில் திருத்தம் உள்ளிட்ட அனைத்து விதமான முறைகேடுகளும் நீட் தேர்வில் நடந்துள்ளன. நீட் முறைகேடு பற்றி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நீட் தேர்வு வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை; பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை மாணவர்களை ஓரம் கட்டவே கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு என்பதைவிட, அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?. எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல.

பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை யூகங்களின் அடிப்படையிலானது என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. தனிப்பட்ட சிலரின் யூகங்களின் அடிப்படையில் அல்ல. ஒரு லட்சம் பேரின் கருத்துக்களை கேட்டே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தயார் செய்துள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவில் எந்த விவரங்களும் யூகங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை.

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்களை, நீட் தேர்வால் பயன் பெற்றவர்கள் என கருதக்கூடாது. நீட் என்பது கல்விமுறை அல்ல. அது ஒரு பயிற்சி முறை. தனியார் பயிற்சி நிலையங்களை இது ஊக்குவிக்கும். நீட் தேர்வு பயிற்சி பெறக்கூடியவர்கள், பயிற்சி பெற முடியாதவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி உள்ளது. கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாதவர்களால், மருத்துவப் படிப்பில் நுழைய முடியாது என்பது மாபெரும் அறிவுத்தீண்டாமை.

ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற வழக்குக்கும், தமிழ்நாடு மசோதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநில அரசுக்கான அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. சமத்துவம் என்பது தான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். நீட் தேர்வு சமத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டம் பாகுபாடு கூடாது என்கிறது; ஆனால் நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்குகிறது. நீட் தேர்வு சமத்துவத்துக்கு முற்றிலும் முரணானது.

நீட் தேர்வின் மோசமான அம்சங்களை 5 ஆண்டாக விளக்கி கொண்டிருக்கிறோம். இன்னும் சிலருக்கு புரியவில்லை. நீட் தேர்வு பாதிப்பை உண்மையில் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாவை நியமன ஆளுநர் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியா பண்பாட்டை சிதைக்கலாமா?. சமூக நீதி மட்டுமல்ல, மாநில சுயாட்சியும் திராவிட ஆட்சியின் கொடை தான்” என்று முதலமைச்சர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry