தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடி! சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம், துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள்!

0
81

தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

சென்னையில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அவர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு, “மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இரண்டு பிரதிகள் வழங்க இருக்கிறோம். மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read : அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் நிறுவனங்கள்! 69% இட ஒதுக்கீடுக்கு மூடு விழாவா என ஈபிஎஸ் கேள்வி?

இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த ஒரு மாத காலத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நவ.12, நவ.13, நவ.26 மற்றும் நவ.27 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம் 6-பி மூலம் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்படி, மாநிலத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 758 பேர் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 17.69 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : கருணாநிதி நினைவிடத்தில் 30ம் தேதி அரசு டாக்டர்கள் மவுனப் போராட்டம்! பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குமுறல்!

மாநிலத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலில் தமிழகம் சிறப்பாக உள்ளது. பல மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெயர்களை சேர்த்துள்ளனர். இதுவரை 56.09 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry