பூணூல் அறுப்பு போராட்டம் அறிவிப்பு! தடா ரஹிமுக்கு இஸ்லாமிய, இந்து அமைப்புகள் எதிர்ப்பு! தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம்!

0
761
vels media tada rahim

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிஜாப்-பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைக்கும் பிராமண ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிராக, காஞ்சி சங்கர மடத்திலிருந்து கோட்சேயின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டத்தைத் தொடர்வோம். பாபாவின் மாணவர்களாகிய எங்களது பூணூல் அறுக்கும் இந்தப் போராட்டம் இஸ்லாமிய சமூகத்தின் தற்காப்பு போராட்டமே ஒழிய யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை“ என்றும் கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிஜாப் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் எழுந்ததாகும். தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இல்லை. அவ்விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இது பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் மாநில அரசு தொடர்புடையதே இன்றி எந்த ஒரு சமூகத்துக்கும் தொடர்புடையது அல்ல.

tamilnadu brahmin samaj

இந்த விவகாரத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும், இந்து சமுதாயத்தைச் சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என்று அறைகூவலாகச் சொல்வதைக் கண்டிகிறோம். அந்த அறிக்கை எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமின்றி, எங்கள் மத உரிமைகளை பாதிக்கும் செயலாகும். இது மட்டுமின்றி பூணூல் அணியும் இதர சமூகத்தினரிடையே அச்சத்தையும் பீதியையும், பாதுகாப்பில்லை என்ற உணர்வையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.

ஹரிஹரமுத்து ஐயர்
ஹரிஹரமுத்து ஐயர்

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். காஞ்சி சங்கராசார்யருக்கும், சங்கர மடத்திற்கும், பூணூல் அணிவோர்களுக்கும் அவர்தம் நிறுவனங்களுக்கும் போதிய பாதிகாப்பு அளிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேபோல் YMJ(ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்) அமைப்பின் நிறுவனத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி-யும், தடா ரஹீம் அறிவிப்பை கண்டித்துள்ளார். மாற்று மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது கோபத்தையே ஏற்படுத்தும், இது சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது, மோதலை ஏற்படுத்தி சமூகக் கேட்டைத்தான் ஏற்படுத்தும். இதுபோன்ற போராட்ட அறிவிப்புகளை ஏற்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தும், தடா ரஹிமுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு, தடா ரஹிம் போன்றவர்கள் பூணூல் அறுப்பு என்ற பிரச்சாரத்தை துவங்கியிருப்பது கலவர நோக்கம் கொண்டது என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் அமைதியின்மையை உருவாக்கும் இவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry