இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்கள்! மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என ஈபிஎஸ் விமர்சனம்!

0
24
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

அஇஅதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சேலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேற்று (11.6.2023) திறந்து வைத்துப் பேசிய நிர்வாகத் திறமையற்ற முதல்வர், மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும்; மக்கள் விரோதிகளைப் பற்றி பேச ஏது நேரம் என்றும் தனது திருவாயை மலர்ந்திருக்கிறார்.

யார் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், குடும்ப நலனை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி செய்பவர்கள் யார்? தலைமைப் பொறுப்பில் அப்பா, மகன் பேரன் இவர்களுக்குப் பிறகு கொள்ளுப் பேரனுக்கு மகுடம் என்று வாரிசு அரசியல் செய்பவர்கள் யார்?

Also Read : ரோகித் செய்த பெரும் தவறு..! நம்பர் 1 பவுலரான அஸ்வினை சேர்க்காதது ஏன்? சச்சின் டெண்டுல்கர் கடும் காட்டம்!

இவர்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மாவட்டந்தோறும் அப்பா, பிறகு மகன் என்று தேர்தலில் நின்ற திமுக-வின் மாவட்டக் குறுந்தலைவர்கள் யார்? வாழையடி வாழையாக திமுக என்ற நிறுவனத்தை நாங்கள்தான் நடத்துவோம்; தொண்டர்கள் என்பவர்கள் எல்லாம் பல்லக்கு தூக்கிகள்தான் என்று கொக்கரிக்கும் மனோபாவம் கொண்ட, மன்னர் பரம்பரையைத் தோற்கடிக்கும் திமுக அரசின் சர்வாதிகார மனோபாவத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அதுமட்டுமல்ல, தோழமைக் கட்சிகளுக்கு திமுக செய்யும் துரோகத்தை, திமுகவின் கட்சிப் பத்திரிகையில் கூட்டணிக் கட்சியினரை படுகேவலமாகத் தாக்கி எழுதுவதன் மூலமும்; திமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தின்படி தோழமைக் கட்சிகளுக்கு அரசுப் பதவிகளை (தலைவர், துணைத் தலைவர்) வழங்காமல் பட்டை நாமம் போட்டதையும், அனைவரும் நன்கு அறிவார்கள்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, பின்புற வாசல் வழியே தப்பித்தோம், பிழைத்தோம் என்று மெகா கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறது.

Also Read : பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்ட கட்சி என்ற முறையில் ஆளும் கட்சியின் திறமையின்மையை, தோல்விகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு.

எனது தலைமையிலான அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடகால தாமதத்துக்குப் பிறகு, திறப்பு விழா நடத்தியுள்ள திட்டங்களை, ஏதோ தான் கொண்டுவந்ததுபோல் ஸ்டிக்கர் ஒட்டி, நாடகமாடி, ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம் என்ற ரீதியில் முதல்வர் நகர்வலம் வருகிறார். தூய்மைத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்த திமுக அரசைக் கண்டித்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள். தமிழக மக்கள் அனைவரும் திருப்தியாக இருப்பதாக நிர்வாகத் திறனற்ற முதல்வர் கனவுலகில் மிதக்கிறார்.

முன்னொரு காலத்தில் காமா பயில்வான் என்று ஒருவன் இருந்தானாம். பெயரில்தான் பயில்வானே தவிர, உண்மையில் புல் தடுக்கி பயில்வானாக திகழ்ந்தானாம். தான் ஒரு பராக்கிரமசாலி போல் விதவிதமாக படங்கள் வரைந்து மாட்டி ஊரை ஏமாற்றி வந்தானாம். ஊரில் உள்ள நல்லவர்களை எல்லாம் இழித்தும், பழித்தும் பேசி வலுச் சண்டைக்கு அழைந்து தன்னை ஒரு வீரன் போல் காட்டிக் கொள்வானாம்.’’ தமிழக மக்களின் தலையெழுத்தாலும், போதாத காலத்தாலும் தற்போது ஆளும் திமுக அரசின் முதல்வருடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, காமா பயில்வான்தான் ஞாபகத்துக்கு வருகிறான்.

இன்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம். ஆனால், அரசுத் துறையான ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஆதாரத்துடன் கூறிய செய்தி ஊடகத்தை அரசு கேபிள் டி.வி-யில் இருந்து மறைத்துள்ளது, பொய் பத்திரிக்கை சுதந்திரம் பேசும் திராவக மாடல் திமுக அரசு.

Also Read : கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

66-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தமிழகத்தின் சார்பாக தேர்வான 247 மாணவர்களில், ஒரு மாணவரைக் கூட அனுப்பாமல், விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சூனியமாக்கியதுடன், மருத்துவர், பொறியாளர் மற்றும் வேளாண் போன்ற படிப்புகளில் சேர்வதற்காகக் காத்திருந்த விளையாட்டு மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மூடுவிழா கண்ட நிர்வாகத் திறனற்ற திராவிட மாடல் அரசின் பட்டத்து இளவரசர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சகா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகிய இருவரும் அதிகாரிகள் மீது பழிபோட்டு தப்பித்தாலும், தமிழக மக்கள் இவர்களுக்கு சரியான பதிலை நாடாளுமன்றத் தேர்தலில் அளிப்பார்கள்.

கொதிப்படைந்த தமிழக மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். ஓராண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த நிலையில், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளோடும் மெகா கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியே சிந்திக்கும் திமுக அரசின் முதல்வருக்கு தமிழக மக்களைப் பற்றி சிந்திக்க நேரமேது?

மீதமுள்ள 35 மாத காலத்தையும், பொய்யையும், புனை சுருட்டையும் மூலதனமாகக் கொண்டு அப்பாவி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்தில் தொடரலாம் என்ற இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry