
சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. விலையேற்றம் சில வாரங்களவே நீடிக்கும் நிலையில், காய்கறிகளை எண்ணிப்பார்த்து வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்தை குறைத்து, கோயம்பேடு சந்தையில் கூடுதல் விலையில், காய்கறிகள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலவகை காய்கறிகள் விளைகிறது. ஆனால், மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை.
எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பலவகை காய்கறிகள் வரவழைக்கப்படுகின்றன. சென்னை, பாரி முனையில் காய்கறி மார்க்கெட் இயங்கும் காலத்தில் இருந்தே, காய்கறிகள் அனுப்புவதை கர்நாடகா, ஆந்திரா விவசாயிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.
கோடை காலத்தில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் அவற்றின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, முருங்கைக்காய் ரு.150, கேரட், பீட்ரூட், அவரைக்காய் உள்ளிட்டவை கிலோ ரூ.100 விற்கப்பட்டது. இதனால் பலரும் காய்கறிகள் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காய்கறிகள் அறுவடை தொடங்கியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே மாதம் 400க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வரத்து இருந்தது. ஆனால், தற்போது 300 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.
கமிஷன் ஏஜென்ட்டுகள் வாயிலாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விவசாயிகள் காய்கறிகளை அனுப்புகின்றனர். காய்கறிகளை விற்பனை செய்து, அதற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கோயம்பேட்டில், பல வியாபாரிகள் கமிஷன் ஏஜென்ட்டுகளாக உள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகள் வரத்தைக் குறைத்து, செயற்கை தட்டுப்பாட்டை இவர்கள் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பலவகை காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்தும், விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில், நேற்றைய நிலவரப்படி கேரட் கிலோ ரூ.70 ஆகவும், பீன்ஸ் கிலோ ரூ.90 ஆகவும், பீட்ரூட் கிலோ ரூ.70 ஆகவும், அவரைக்காய் கிலோ ரூ.75 ஆகவும், முருங்கைக்காய் கிலோ ரூ.100 ஆகவும், இஞ்சி கிலோ ரூ.140 ஆகவும், பட்டாணி கிலோ ரூ.200 ஆகவும், பச்சை மிளகாய் கிலோ ரூ.45 ஆகவும், சேனைக்கிழங்கு கிலோ ரூ.68 ஆகவும், முட்டைகோஸ் கிலோ ரூ.40 ஆகவும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 ஆகவும், தக்காளி கிலோ ரூ.35 ஆகவும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.45 ஆகவும் விற்பனையானது.
மொத்த விற்பனையிலேயே விலை அதிகமாக இருப்பதால், சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகளை எண்ணிப்பார்த்து வாங்கும் நிலைதான் உள்ளது. சில்லறை விற்பனையில் கேரட் கிலோ ரூ.100, பீன்ஸ் கிலோ ரூ.120, அவரைக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் கிலோ ரூ.80, கத்தரிக்காய் கிலோ ரூ.88, பீட்ரூட் கிலோ ரூ.60, முள்ளங்கி கிலோ ரூ.60, சவ்சவ் கிலோ ரூ.60, மாங்காய் கிலோ ரூ.70, பாகற்காய் கிலோ ரூ.100, கோவக்காய் கிலோ ரூ.60, பீர்க்கங்காய் கிலோ ரூ.80, இஞ்சி கிலோ ரூ.180, பச்சைமிளகாய் கிலோ ரூ.180, சின்னவெங்காயம் கிலோ ரூ.100 என விற்பனையாகிறது.


இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோயம்பேடு காய்கறி, பழம், பருப்பு, பூ வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவரான ராஜசேகரன், “மழை காரணமாகவே விளைச்சல் குறைந்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் மழை பெய்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் காய்கறி பயிரிடப்பட்டிருந்த சுமார் 30% நிலங்கள் சேதமடைந்துவிட்டன. இரண்டு மாதங்களில் இயல்பு நிலை திரும்பும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே காய்கறிகள் பயன்பாட்டை குறைத்துக்கொண்டுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு இதேபோன்று அதிக விலையில்தான் காய்கறிகள் விற்கப்படுமா? என்று கேட்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பெரும்பாலான காய்கறிகள் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry