வதந்தியைத் தடுக்காவிட்டால் மதக்கலவரம் உருவாகும்! தமிழக அரசை எச்சரிக்கும் பால் முகவர்கள் நலச்சங்கம்!

0
116

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் பெரும்பான்மையான இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி, பொங்கல், சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் மற்றும் அனைத்து தரப்பினராலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்துச்செய்தி அச்சிட்டு வெளியிடப்பட்டு வருவது திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சியிலும் பல ஆண்டுகளாகவே தொடரும் நிகழ்வாகும்.

Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! சிக்கலில் சிறுமியின் பெற்றோர்? வசமாகச் சிக்கும் வழக்கறிஞர்கள், யூ டியூபர்கள்!

ஆனால் தமிழகத்தில் மதத்தின் பெயரால் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருபவர்களால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடும் தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில்லையே ஏன்?, இந்துக்கள் என்றால் ஏளனமா? என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறையை நிகழ்த்தத் துடிக்கும் தீயசக்திகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மதங்களால் பிரிந்திருந்தாலும், உணர்வால் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் ஒற்றுமையாக, உடன்பிறவா சகோதர, சகோதரிகளாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் தமிழகத்தில், இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இவ்வாறான தவறான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகின்றன.

Also Watch : 8 வழிச்சாலை | திமுகவின் பல்டிகள் 🤣 | ஸ்டாலின் அன்று பேசியது; எ.வ. வேலு இன்று பேசியது.

அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நாட்களில் மட்டும் வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் அதுபோன்ற வதந்திகளை பரப்பி அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து, வன்முறையை அரங்கேற்ற திட்டமிட்டு இது போன்ற விஷமச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு வதந்திகளை பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியன்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இணையதளம் வாயிலாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அதே வதந்திகள் இன்னும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, மறுக்க வேண்டிய ஆவின் நிர்வாகமோ அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஆவினில் மக்கள் தொடர்பு அதிகாரி என ஒருவர் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதக்கலவரம் உருவானதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Also Watch : செய்தியாளரிடம் சீறிய எ.வ. வேலு | 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவே இல்லை.

எனவே சமூக வலைதளங்களில் வருகின்ற இது போன்ற வதந்திகளை பொதுமக்களும் உண்மையென நம்பி எவருக்கும் பகிர வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, காட்டுத்தீ போல் வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் மேற்கண்ட வதந்திகளை தடுத்து நிறுத்த தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry