ராசி பலன்! மனநிறைவைத் தரும் வாரம்! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தா…! மஞ்சள் விவசாயிகளுக்கு குஷிதான்!

0
30
Weekly Horoscope: Check Astrological prediction from September 18h to 24th September 2023 | PIXABAY

இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 18ல் இருந்து செப்டம்பர் 24 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிக்கும் குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் ஆறில் அமர்ந்து சூரியன் உடன் இணைந்து இருப்பதால் பூர்வீகச் சொத்து வழியில் வம்பு, வழக்கு, பிரச்னைகள் ஏற்பட்டு தொல்லைகளைத் தரும். தகப்பன் உடனும், தகப்பனார் வழி உறவினர்கள் உடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். சிலருக்கு பல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அரசு உதவி, அரசாங்க வங்கியில் கடன் பெறுவதற்கு இதுவரை இருந்த தடைகள் விலகி அனைத்தும் சாதகமாக அமையும். தாய், மனைவிக்கு ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஆடம்பர வாகனங்களை வாங்குவீர்கள். 19, 20 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் மனக்குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

ரிஷபம் : எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய ரிஷப ராசிக்காரர்களே, கருப்பு நிற பொருட்களால் லாபம் கிடைக்கும். கைவினை, மரசி சிற்ப கலைஞர்கள், நிதானமாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். மகன், மகளின் உயர்கல்விக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்தக் கல்லூரியில் சேர்த்து அழகு பார்ப்பீர்கள். படித்து முடித்த மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகி மனநிறைவை தரும். தாய், மனைவி வழியில் செலவுகள் ஏற்படும். பழைய, வீடு, வாகனங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விலையுயர்ந்த செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். 22ம் தேதி பிற்பகல் தொடங்கி 24ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். நீண்ட தூரப் பயணங்கள், முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Also Read : விநாயகர் ஏன் யானைமுகத்தான் ஆனார்? தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகர் யார்? சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

மிதுனம் : பேச்சில் வல்லவரான மிதுன ராசிக்காரர்களே, தகவல் தொழில்நுட்பம், வங்கி, கல்வி, எழுத்து, பேச்சு, ஓவியம் ஆகியத் துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். உங்கள் திறமையை வெளிக்காட்ட புதிய வாய்ப்புகள் அமையும். அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசுக் குடியிருப்பு, வாகன வசதி கிடைக்கும். மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் நல்ல லாபம் அடைவார்கள். பருத்தி, ஜவுளி தொடர்பான தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். இசை, பாடல், நடனம் போன்றவற்றில் உங்களின் திறமை வெளிச்சத்திற்கு வரும் நேரம் இது. வேகமாக சந்திக்கிறோம், விரைவாக முடிவு எடுக்கிறோம் என்ற பெயரில் தவறான முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 18, 19, 20 ஆகியத் தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம் : தாய், தந்தை மீது அன்பு கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் வளர்பிறை நிலையை நோக்கிச் செல்வதால் இதுவரை இருந்த மனக்குழப்பம், தெளிவு இல்லாத நிலை மாறும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள், அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடக ராசியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் கணக்கு, அக்கவுண்டன்சி பாடத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியத் தேவை ஏற்படும். பிள்ளைகள் பேச்சைக் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அடிக்கடி எட்டிப் பார்க்கும். லாட்டரிச் சீட்டு, ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோ கரன்சி, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். அஷ்டமச் சனி பாதிப்புகளை அவ்வப்போது சந்திக்க நேரிடும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 23, 24 ஆகிய தேதிகளில் உடல் நலனில் கவனமாக இருங்கள்.

Also Read : ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!

சிம்மம் : பிறருக்கு உதவும் குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ஆவணி மாதம் எதிர்பார்த்த அளவிற்கு எதையும் சாதிக்க முடியாத நிலையில் இருந்திருப்பீர்கள். சாதகமற்ற நிலை புரட்டாசி மாதத்தில் மாறி அனைத்தும் உங்களுக்கு ஏற்றவகையில் அமையும். ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் தனக்குப் பிடித்த புதனின் கன்னி வீட்டில் இருப்பதால் சம்பாதிக்கும் ஆற்றல் அதிகரித்து வருமானம் உயரும். குடும்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டுக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். வார்த்தையில் நிதானமாக இருங்கள். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உடன் இருந்த மோதல் போக்கு தற்போது சரியாகும். உங்களைப் பற்றி குறை கூறியவர்கள், பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் 19, 20 ஆகிய தேதிகளில் சற்றுக் கவனமாக இருங்கள்.

கன்னி : அனைவரிடமும் எளிதில் பழகும் இயல்பு கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசியில் சூரியனும், செவ்வாயும் இணைந்து இருப்பதால், தானாக வந்து பேசும் நபர்களிடம் உஷாராக இருங்கள். பேச்சிலும், செயலிலும் முடிந்தவரை பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விடுங்கள். குடும்பத்தில் மட்டுமின்றி அலுவலகம், வியாபாரம் செய்யும் இடத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் உங்களை மாற்றிக் கொண்டால் பிரச்னைகளைச் சமாளித்து விடலாம். சும்மாயிருக்கும் நேரத்தில் என்ன செய்தால் வருமானம் கிடைக்கும். முதலீடு இல்லாமல் அறிவு, திறமை, பேச்சாற்றலால் பணம் சம்பாதிக்க முடியுமா? என்ற எண்ணம் மேலோங்கும். வருமானத்துக்குத் தகுந்த செலவுகள் செய்தால் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்பதால் தாராளமாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

Also Read : உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!

துலாம் : அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசிக்காரர்களே, வெள்ளை நிறம், நீர் மற்றும் மக்கள் அருந்தக்கூடிய திரவப் பொருட்கள் சார்ந்த தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெண்களை அனுசரித்துச் செல்லுங்கள். தராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் துல்லியமாக எடைபோட உதவுகிறதோ, அதைப் போல மற்றவர்களை எடைபோட கற்றுக்கொள்ளுங்கள். வலவலவென பேசுவதைக் குறைத்துக் கொண்டு, அளவாகப் பேசுவதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்த்து விடலாம். குடும்பப் பொறுப்புகளை வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள். கூட்டுத் தொழில், அன்றாடம் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு சேவை செய்யும் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 18, 19, 20 ஆகியத் தேதிகளில் முக்கியமான வேலைகளை மேற்கொள்ள வேண்டாம்.

விருச்சிகம் : விஷமத்தனம் அதிகம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசுவதைக் குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் உண்மையிருக்கும் என்றாலும், மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். குரு பகவான் வக்கிரமாக இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. வீண் வாதங்கள், தேவையற்ற பேச்சுகளால் எதிரிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நான்கு நாட்கள் வேலை செய்தால், இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவீர்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வர ஆசைப்படுவீர்கள். அரசாங்க வழியில் ஆதாயம் உண்டு. அரசு ஒப்பந்தம் கிடைக்கும். தேவையான நேரத்தில் அண்ணன், அக்கா உதவி செய்வார்கள். அரசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரம், கட்டளையிடும் பதவி தேடி வரும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் 19, 20 ஆகிய தேதிகளில் செலவுகள் அதிகரிக்கும்.

Also Read : செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!

தனுசு : கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாகப் பழகும் சுபாவம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, தெய்வ பக்தி, கருணை, நீதி, நேர்மை, நியாயம் பேசும் நீங்கள் திடீரென நான், என் குடும்பம் என்று சுய நலமாகச் சிந்திப்பீர்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும், தர்மமும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்களில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். லாபம் அதிகம் கிடைக்கும் என்று நீங்கள் ஒரு கணக்கு போட்டால் நடப்பது வேறொன்றாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள், உறவினர்கள், திடீரென அறிமுகமாகும் நபர்களை நம்ப வேண்டாம். அலுவலகத்தில் பணிபுரியும் எதிர் பாலினத்தவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் 21, 22 ஆகிய தேதிகளில் கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம் : வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாது கடந்து செல்லும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்களே, கஷ்டப்பட்டு உழைத்தாலும் கைக்கு வரவேண்டிய பணம் தாமதமாகிறதே என்ற மனக்கவலை அதிகரிக்கும். உழைத்தது போதும் நிம்மதியாக இருக்கலாம் என்றாலும், எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படாமல் இருக்கும். செலவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள் என்பதால் கையிருப்பு, பேங்க் பேலன்ஸ் குறைவாகவே இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குத் திருமணம் நடந்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் 23, 24 ஆகிய தேதிகளில் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்லுங்கள்.

Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

கும்பம் : குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ஒரு காரியத்தை உங்களிடம் ஒப்படைத்தால் அது முடிந்து விடும் என மற்றவர்கள் நினைப்பார்கள். நீங்களும் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த வேலையைச் செய்து முடிந்தாலும், அதற்கேற்ற பலனோ, அங்கீகாரமோ உங்களுக்கு கிடைக்காது என்ற நிலை ஏற்படும். பிடித்தவர்களிடம் நெருங்கிப் பழகும் குணம் கொண்ட நீங்கள், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் கூடப் பார்க்க மாட்டீர்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துச்சமாக நினைத்து தூக்கி எறிவீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு வளைந்து கொடுக்கும் மனப்பான்மையை சற்று வளர்த்துக் கொள்வது நல்லது. ஜென்ம சனி பாதிப்பில் இருப்பதால் உயிர் நண்பர்கள், நெருங்கிய உறவுகளே உதவ மாட்டார்கள் என்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

மீனம் : சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் கொண்ட மீன ராசிக்காரர்களே, சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் என்பதால், எதைச் செய்வதாக இருந்தாலும் சற்று சிந்தித்து கவனமாக செய்வது நல்லது. கெட்ட சகவாசம் கொண்ட நட்பை விட்டு ஒதுங்கி இருங்கள். பேசிப் பேசியே நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். புகழ்ச்சிக்கு நீங்கள் அடி பணிவதால், உங்களைப் புகழ்ந்தால் போதும், மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்து விடுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அதிகமாக இருக்கும். எத்தகையத் துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விரும்பி வாங்கி அணிந்து கொள்வீர்கள். 18, 19, 20 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் சற்றுக் கவனமாக இருங்கள்.

தொடர்புக்கு:-  ஜோதிட சிரோன்மணிஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை.  astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

குறிப்பு : ஜோதிடம் தொடர்பான வாசர்களின் கேள்விகளுக்கு, ஜோதிட சிரோன்மணிஆர்.கே.வெங்கடேஸ்வரர் பதிலளிக்க உள்ளார். கேள்விகளை  astrovenkataeswar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Recommended Video

சனாதனம் : உளறிய உதயநிதி! உண்மையை உடைத்த Aravind Subramanyam ! What is Sanātana Dharma?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry