இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன், அதில் பணியாற்றி வரும் அவரது நண்பரான பூராசாமி ஆகிய இருவரும் மது குடித்த நிலையில் இறந்த பிறகு உயிரிழந்து கிடந்ததற்கு அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மங்கைநல்லூரில் மது அருந்திய பின்னர் உயிரிழந்த இருவரும் நண்பர்கள், அவர்களுக்கு குடும்பத்திலோ, தொழிலோ எந்த பிரச்சினையும் கிடையாது; அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதனால், அவர்கள் மதுவில் சயனைடு கலந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்களில் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அத்தகைய சூழலில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்தது எப்படி? ஒருவேளை அவர்களே கலந்ததாக வைத்துக் கொண்டால், சயனைடு அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? கொடிய நஞ்சான சயனைடு விரும்பியவர்கள், விரும்பிய நேரத்தில் கிடைப்பதை அரசு அனுமதிக்கிறதா?
தஞ்சாவூரில் கடந்த மே 21-ஆம் நாள் மதுக்கடை ஒன்றில் மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு, அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருந்தது தான் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுகுறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. அதன்பின் இன்று வரை 24 நாட்கள் ஆகியும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவில் சயனைடு எவ்வாறு கலந்தது? என்பதற்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. இப்போது அதே முறையில் மயிலாடுதுறையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அப்படியானால் டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவிலேயே நஞ்சு கலந்திருந்ததா? என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
Also Read : பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!
தமிழ்நாட்டில் மது அருந்தி மக்கள் உயிரிழப்பது தொடர்வதும், மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று கூறி விட்டு அரசு கடந்து செல்வதும் கவலை அளிக்கிறது. இது தொடர்பான மக்களின் ஐயங்களைப் போக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படிப்படியாக மதுவிலக்கு என கூறிக்கொண்டு, மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்க துடிப்பது ஏன்? மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகமாக இருக்கும். எனவே, மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்கும் நோக்குடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை டாஸ்மாக் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார். அதன் ஒரு கட்டமாக 500 மதுக்கடைகள் விரைவில் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி மூடப்பட்ட குடிப்பகங்கள் தவிர, மீதமுள்ள குடிப்பகங்களை மூடுவது தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். அதை விடுத்து மூடப்பட்ட மதுக் குடிப்பகங்களை மீண்டும் திறக்க வசதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு தடை கோருவது ஏன்?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry