மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு எதிராகவும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தில், பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசி உள்ளார். அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை திட்டமிட்டு பேசியுள்ளார்.” என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்தமுதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத அண்ணாமலை, உள்நோக்கத்துடன் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்கு கண்டனம்.
Also Read : பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!
அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 1998ம் ஆண்டு மத்தியில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்க அதிமுகதான் காரணம். பல தேசிய தலைவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்குள்ள நபராக அவர் இருந்துள்ளார். 20 வருடங்களாக எம்.எல்.ஏ. இல்லாத பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுத் தந்தது அதிமுகதான். எனவே பாஜக மாநிலத் தலைவரின் பேச்சினை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry