குரு பெயர்ச்சி பலன்கள் 2024! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? சுருக்கமான பலன்கள்!

0
336
குரு பகவான்

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். ரிஷப ராசியில் அடுத்து ஒரு வருடம் (01.05.2024 முதல் 13.04.2025 வரை) சஞ்சரிக்க உள்ள குரு பகவான் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தருவார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு, தன ஸ்தானத்தில், செல்வ குருவாகச் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக பேச்சு மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் முன்னுரிமை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் சம்பளம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

பரிகாரம் – விநாயகர் மற்றும் மகாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்

இந்த ஜென்ம குரு காலத்தில் தான் ராமர் வனவாசம் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அலைச்சலும், அதன் மூலம் ஞானமும் கிடைக்கும். அதே சமயம் ஜென்ம குருவை கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த காலத்தில் பூர்வீக சொத்துக்கள் சேரும். உத்தியோகம், சுய தொழிலில் கடின உழைப்புக்கு ஏற்றத்தை பெற்றிடலாம். இருப்பினும் கோபத்தை கட்டுப்படுத்துவதோடு, பேச்சிலும் இனிமை தேவை.

பரிகாரம் – தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.

மிதுனம்

விரய குருவால் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் எதிர்ப்புகளும், வேலையில் முன்னேற்ற தடைகளும் நீங்கும். இந்த காலத்தில் உடல் நலன், உணவு விஷயத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எந்த ஒரு புதிய ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடுவதற்கு முன் அந்த ஆவணத்தை கவனமாக படிப்பது அவசியம். ஒப்பந்தம் தொடர்பாக முழுமையாக தெரிந்து கொள்ளவும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பரிகாரம் – தினமும் விநாயகரை வழிபடுவது அவசியம்.

Also Read : குருவைக் கண்டறியும் எளிய வழிமுறை! ஞானிக்கு குருவான நாய்! சிந்தனையைத் தூண்டும் சிறிய கதையுடன் எளிமையான விளக்கம்!

கடகம்

லாப குருவாக சஞ்சரிக்கிறார். அஷ்டம சனி நடந்தாலும், உங்களுக்கு வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். நிதி நிலைமை மேம்படும். பழைய வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். தம்பதியர் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். புதிய பணிகளில் வாய்ப்புகள் தேடி வரும். பிறரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம்.

பரிகாரம் – ஆஞ்சநேயர், ராகவேந்திரர் போன்ற மகான்களை வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

கர்ம ஸ்தானத்தில் தொழில் குருவாக அமைந்துள்ளார். வேலை, தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாக்கு வன்மை, வசதிகள் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை தீரும். அலுவலகத்தில் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

பரிகாரம் – திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபாடு செய்ய வேண்டும்.

கன்னி

பாக்கிய குருவாக அமர உள்ளார். குருவின் ஐந்தாம் பார்வையால் மதிப்பு, மரியாதை உயரும். சுப காரியங்கள் நீங்கும். தொட்ட விஷயம் எல்லாம் துலங்கும். அலுவலகத்தில் திறமைக்கு பாராட்டும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் அனுகூலமான பலனை பெற்றுத் தரும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரம் – பைரவர், நரசிம்மர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

Also Read : தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

துலாம்

எட்டாம் இடத்தில் குருவின் சஞ்சாரத்தால், முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும், சொல், செயலில் கவனம் தேவை. ரத்த உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இருப்பினும் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். பணியிடத்தில் கிடைக்க வேண்டிய உயர்வுகள், நற்பலன்கள் கிடைக்க தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் உண்டாகும்.

பரிகாரம் – துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி வழிபாடு செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

விருச்சிகம்

களத்திர குருவாக சஞ்சரிக்கிறார். குருவின் ஏழாம் பார்வையால் தொட்டதெல்லாம் வெற்றி பெறும். லாபம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் முன்னேற்றமும், ஆதாயமும் உண்டாகும். பணியிடத்தில் பெயர், புகழ் உண்டாகும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தை பெற்று தருவதாக இருக்கும்.

பரிகாரம் – துர்க்கை அம்மன் வழிபாடு, முருகன் வழிபாடு முன்னேற்றத்தை உண்டாக்கும்.

தனுசு

நோய், எதிரி ஸ்தானத்தில் ரோக குருவாக சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக எந்த ஒரு வேலையும் சிறப்பான பலனைத் தரும். தொழில் விஷயத்தில் மேன்மை உண்டாகும். இருப்பினும் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது அவசியம். குடும்பம், அலுவலகச் சூழல் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு இடம் மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வேலையில் சேர நினைப்பவர்கள் அந்த பணி உறுதி செய்யப்படுவதற்கு முன், நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியை விட வேண்டாம்.

பரிகாரம் – சீதாராமன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

Also Read : ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? சிம்ப்பிள் & சூப்பர் டிப்ஸ்!

மகரம்

மகர ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரித்துள்ளார். குருவின் மிக சிறப்பான பலனை தரக்கூடிய ஒன்பதாம் பார்வை இந்த ராசி மீது விழுகிறது. இதன் காரணமாக அனைத்து விதத்திலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரின் விஷயத்தில் தலையிடுவதால் பிரச்சனைதான் ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்படவும்.

பரிகாரம் – தினமும் ஆஞ்சநேயர், கணபதி வழிபாடு செய்வது அற்புத பலன்களை தரும்.

கும்பம்

சுக குருவாக சஞ்சரிப்பதால், பொருளாதார நிலை மேம்படும். பதவி, பட்டம் கிடைக்கும். உடல் நலம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஏற்றம் பெறுவீர்கள். வரவுகள் இருந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். எந்த இடத்திலும் வீண் விவாதம் செய்ய வேண்டாம். இந்த காலத்தில் சரியான திட்டமிடலும், நேரம் தவறாமையும் கடைப்பிடிப்பது முன்னேற்றத்தைத் தரும். ஜென்ம சனி நடப்பதால் புதிய விஷயங்களை தொடங்கும் முன்பாக நிபுணர்களின் ஆலோசனை பெறுவதும், ஆலோசித்து முடிவு எடுப்பதும் நல்லது.

பரிகாரம் – சிவ வழிபாடு செய்வதும், ஸ்ரீ ராமஜெயம் மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மை தரும்.

மீனம்

இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்துள்ளதால், குடும்பத்தில் அமைதி நிலவும். தைரியம், நம்பிக்கையால் நினைத்த விஷயங்கள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இருப்பினும் அதீத நம்பிக்கை, தலைக்கனத்தைத் தவிர்ப்பது அவசியம். இந்த காலத்தில் பிறரை அதிகம் நம்புவதும், அவர்களை குறை சொல்வதும் கூடாது. இலக்குகளை அடைய சோம்பலை கையை விட்டு, சுறுசுறுப்புடன் முயலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

பரிகாரம் – ஸ்ரீ ரங்கநாதரை வழிபாடு செய்வதும், கருடரை வழிபடுவதும் நன்மை தரும்.

Also Read : பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry