நாடு முழுவதும் செப்டம்பர் 12-ந் தேதி நீட் தேர்வு! தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என  மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

0
34

2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். விண்ணப்பப் பதிவு நாளை மாலை தொடங்குகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் NEET தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அதுகுறித்து அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

கொரோனா 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. தேர்வு குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் மத்திய அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பப் பதிவு நாளை (ஜூலை 13) மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எழுப்பிய சந்தேகத்தால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. ஆனால், தமிழகத்திலும் உறுதியாக நீட் தேர்வு நடைபெறும் என வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டது.  ஆகஸ்டில் தேர்வு நடைபெறலாம் என்பதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தோம்

Also Read : இணையதளத்தில் வெளியாகிறது நீட் விண்ணப்பம்! ஆகஸ்ட் 1-ல் நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படுவது உறுதி!

நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ’’நீட் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்காக தமிழக அரசின் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதேசமயத்தில், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry