UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!

0
170

ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI (Unified Payments Interface) வணிகப் பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்(NPCI) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகளை NPCI ஏற்கெனவே பல முறை வழங்கியுள்ளது.

National Payments Corporation of India(NPCI), வரும் ஏப்ரல் 1 முதல் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) மூலம் செய்யப்படும் ரூ.2000க்கும் மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரை பரிமாற்றக் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அமலுக்கு வந்தால், பரிவர்த்தனைகளுக்கு யாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும்? எந்தப் பேமெண்ட் முறைகளில் கட்டணம் விதிக்கப்படும்? என்பது குறித்து பயனர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

NPCI ஏப்ரல் 1ந் தேதி முதல் ரூ.2000க்கும் மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ள நிலையில், UPI பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

NPCI சுற்றறிக்கை என்ன பரிந்துரைக்கிறது?

NPCI சுற்றறிக்கையின்படி, ரூ. 2,000க்கு மேல் உள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கு UPI மொபைல் வேலட் எனப்படும் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ல் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரை பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும்.

Also Read : பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

UPI மூலம் நண்பர்கள், குடும்பத்தினருக்கு பணம் செலுத்துவதை இது பாதிக்குமா?

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தாது. நண்பர்கள், குடும்பத்தினர், பிற தனிநபர் அல்லது வணிகரின் வங்கிக் கணக்கிற்கு UPI மூலம் அனுப்பப்படும் பணத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிமாற்றக் கட்டணம் பொருந்தாது. தனிநபர் – தனிநபர் (பி2பி), தனிநபர் – வர்த்தகர் (பி2பிஎம்), வங்கி – வங்கி கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட சாதாரன UPI பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பரிமாற்ற கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஃபோன் பே, கூகுள் பே செயலியில் UPI மூலம் மேற்கொள்ளப்படும் இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

ப்ரீபெய்டு பேமெண்ட் கருவி என்றால் என்ன?

வாலட்டுகள், முன்பே பணம் ஏற்றப்பட்ட பரிசு அட்டைகள் ப்ரீபெய்ட் கட்டண இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (பிபிஐ) ஆகும். Paytm Wallet, PhonePe Wallet, Amazon Pay, Freecharge Wallet, Ola Money போன்றவை ப்ரீபெய்ட் பேமென்ட் மற்றும் வாலட்டுகளின் கீழ் வரும்.

UPI வழியாக PPI கட்டணம் என்றால் என்ன?

UPI வழியாக PPI செலுத்துதல் என்பது, Paytm Wallet உள்ளிட்டவைகள் மூலமும், UPI QR குறியீட்டின் மூலமும் செய்யப்படும் பரிவர்த்தனை ஆகும். உதாரணமாக, உங்கள் Paytm Wallet இல் பணம் இருந்தால், வணிகரின் UPI QR குறியீடு மூலம் பணம் செலுத்த விரும்பினால், 2,000க்கு மேல் வணிகப் பணப் பரிமாற்றம் செய்தால், 1.1% வரை பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும். பரிமாற்றக் கட்டணம் என்பது பெறுநரின் வங்கி/பணம் செலுத்தும் சேவை வழங்குநரால் வணிகரிடம் வசூலிக்கப்படும் கட்டணமாகும்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

இந்தக் கட்டணங்களை யார் செலுத்துவார்கள்?

NPCI பரிந்துரைத்துள்ள கட்டணங்கள் அமலுக்கு வந்தால், நீங்கள் ஒரு கடையில் UPI மூலம் PPI கட்டணம் செலுத்தினால், QR குறியீடு PhonePe உடையதாக இருந்தால், PhonePe வணிகரிடம் இருந்து பரிமாற்றக் கட்டணத்தைப் பெறும்.

கிரெடிட் கார்டுகள் மூலம் பயனர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது போலத்தான் இதுவும் – வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பரிவர்த்தனைகளுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

UPI மூலம் வாலட்களில் பணத்தை ஏற்றினால், தற்போதைய நிலையில் நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரம், Paytm, PhonePe போன்ற வாலட் வழங்குநர்கள், கட்டணத்தை பயனர்கள் செலுத்தும் வகையில் மாற்றி அமைத்தால், அப்போது கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
NPCI சுற்றறிக்கையின்படி, ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்கள்.

இந்தியா முழுக்க UPI  பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் UPI பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு தவிர்க்க முடியாத ஒன்றாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மாறிவிட்டது. 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 கோடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவின் பணப்பரிவர்த்தனையில் மாபெரும் புரட்சியை UPI நிகழ்த்தி இருக்கிறது. நேரடி பணப்பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான அதேசமயம் மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பணப் பரிவர்த்தனை அமைப்பை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்று 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யுபிஐ 2016-ம் ஆண்டு அறிமுகமானது.

Also Read : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!

இந்தியாவின் யுபிஐ உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன. பல நாடுகள் தங்கள் நாட்டிலும் UPI போல் பணப்பரிவர்த்தனை நடைமுறையைக் கொண்டு வர இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry