சென்னையைத் தொடர்ந்து, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த மாதம் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்து டெண்டர் விட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமனம் என, திமுக ஆட்சியில் அரசு நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்பட்டு கொண்டே வருகின்றன.
Also Read: அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive
பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாளர் நியமனம் செய்யப்படாததாலும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதாலும், ஓட்டுநர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக போக்குவரத்துத்துறை கூறுகிறது. இந்நிலையை மாற்ற, பணி நியமனம் செய்வதற்கு பதிலாக, தனியார் ஏஜன்சி வாயிலாக ஓட்டுநர்களை பெற்று, பேருந்துகளை இயக்கப்போவதாக போக்குவரத்துக் கழகங்கள் கூறுகின்றன.
இதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 400 தனியார் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு “ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
அதன்படி, திருச்சி, மதுரை, நாகை பணிமனைகளுக்கு தலா 50; சென்னை அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு தலா 40; ஓசூர், தூத்துக்குடிக்கு தலா 25; கும்பகோணம், தஞ்சாவூர் தலா 20; கோவை 30; ஓசூர் 25; காரைக்குடிக்கு 10 பேர் என, 400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 18% ஜிஎஸ்டி வரியுடன் 533 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும், 12 மாத கால பணி அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓட்டுநர்கள், சென்னையில் தனியார் ஓட்டுநருக்கு, ஒரு மணி நேரத்துக்கு, 148 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு நாளுக்கு, 1,200 ரூபாய்க்கு மேல் சம்பளமாக கிடைக்கும். விரைவு பேருந்துகளில், ஒரு நாளுக்கு, 600 ரூபாய் சம்பளம் எனக் கூறப்படுகிறது. நிரந்தர ஓட்டுநர்கள் பணியில் சேரும் முன், பாதுகாப்பு தொகை செலுத்த வேண்டும் என்கின்றனர்.
ஆனால், இந்த நியமனத்துக்கு விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. இவர்களால் விபத்து ஏற்பட்டால், பயணியர் மற்றும் பேருந்தின் பாதுகாப்பு என்ன என்பது குறித்து, தெளிவான தகவல் இல்லை. நிரந்தர ஓட்டுநர் வராத நாளில், தனியார் ஓட்டுநர்களை தேடுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. புதிதாக பணிக்கு வரும் ஓட்டுநருக்கு, பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்படும். அதனால், ஓட்டுநர்களை, அரசே நேரடியாக நியமித்து, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த திமுக அரசு, பணி நியமனம் செய்யாமல், இருக்கக் கூடிய தொழிலாளர்களை வைத்தும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்தும் போக்குவரத்துத் துறையை நடத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
மட்டுமின்றி, அரசு பேருந்து போக்குவரத்து தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என துறை அமைச்சர் உறுதி அளித்ததற்கு மாறாக, அரசு போக்குவரத்து தனியார் மயமாக்கப்படுகிறதோ என்று கவலை தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அவர்களின் திறன் குறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து காலி இடங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலேயே, தற்காலிகமாக மக்களை பணியமர்த்தி வருவது, ஒருபக்கம் உழைப்பு சுரண்டலையும், மறுபக்கம் தகுதியில்லாத ஆட்களுக்கு பணி நியமனம் வழங்குவதையும் அரசு நேரடியாக செய்து வருகிறது. நிரந்தரமான அரசு வேலை என்பதை இனி மக்கள் எதிர்பார்த்துவிட முடியாது என்பதற்கு இதுவே சான்று.
Recommended Video
நிரந்தர ஓட்டுநர்களுக்கு பதிலாக தனியார் ஒப்பந்த ஓட்டுநர்கள்? ~ Temporary drivers for Govt. buses
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry